வைர நகை நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த ஆடவர் ஒருவர், தமது கடைசி வேலை நாளில் மொத்தம் $250,000 மதிப்புள்ள 298 நகைகளை மலேசியாவில் விற்க திருடிச் சென்றுவிட்டார்.
‘லோவிஸ் டைமண்ட்ஸ்’ எனும் அந்த நகை நிறுவனத்தில் உதவி செயல்பாட்டு மேலாளராக பணிபுரிந்த லோ கின் லியோங், 29, நேற்று நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
மலேசியரான அந்த ஆடவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
லோவிஸ் டைமண்ட்ஸ் நிறுவனத்தில் 2013ஆம் ஆண்டில் அவர் விற்பனை நிர்வாகியாக சேர்ந்தார்.
அந்த நிறுவனத்தின் இரண்டு கடைகளின் விற்பனை நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் பணியில் லோ ஈடுபட்டிருந்ததாக அரசாங்க தரப்பு வழக்கறிஞர் விக்டோரியா டிங் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
நியூ அப்பர் சாங்கி சாலையில் உள்ள பிடோக் மால் கடைத்
தொகுதியில் ஒரு கடை இருந்தது. மற்றொன்று, பூன்லே வே அருகே கேட்வே டிரைவில் உள்ள வெஸ்ட்கேட் கடைத்தொகுதியில் இருந்தது.
இரண்டு கடைகளுக்கும் காக்கி புக்கிட்டில் உள்ள அந்த வைர நகை நிறுவனத்தின் தலைமையகத்திற்கும் இடையில் பொருட்களை இடமாற்றுவதற்கான முழு அங்கீகாரமும் லோவுக்கு வழங்கப்பட்டிருந்தது.
பின்னர் அவர் தமது கடைசி நாள் வேலை, 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி என முடிவு செய்து, அந்தக் கடைகளில் இருந்து மதிப்புமிக்க நகைகளை முறைகேடாக கையாளுவதற்கான திட்டத்தைச் செயல்படுத்தினார்.
அதன் அடிப்படையில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றில், பிடோக் மால் கடையின் தமது கீழ்நிலை அதிகாரிகளில் ஒருவரிடம் 101 நகைகளை வெளியே எடுக்கும்படி லோ கேட்டார்.
அதன் பிறகு, அந்த நகைகள் வெஸ்ட்கேட் கடைக்கு மாற்றப்படும் என்பதைக் குறிக்க, கடையின் புள்ளி விற்பனை முறையை அவர் பயன்படுத்தினார்.
அன்றிரவு 8 மணியளவில், வெஸ்ட்கேட் கடைக்கு நகைகளை ஒரு பையுடன் லோ கொண்டு வருவதை மற்றொரு கீழ்நிலை அதிகாரி கண்டார்.
பின்னர், விலைமதிப்புமிக்க அந்த நகைகளை உள்ளடக்கிய ஒரு கறுப்பு குப்பை பையுடன் வளாகத்தை விட்டு லோ வெளியேறினார்.
அடுத்த நாள் மதியம் 1.40 மணியளவில், தாம் திருடிய நகைகளை மலேசியாவில் விற்பனை செய்வதற்காக உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக நகைகளுடன் சிங்கப்பூரிலிருந்து லோ புறப்பட்டார்.
மலேசியாவில் நகைகளை விற்றதன் மூலம் அவர் பெற்ற தொகை எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இச்சம்பவம் குறித்து லோவிஸ் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் வணிக மேலாளர் 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி போலிசிடம் புகார் கொடுத்தார்.
மலேசிய அரச போலிஸ் படையிடம் சிங்கப்பூர் போலிஸ் படை உதவி கோரியதையடுத்து அதன் அதிகாரிகள் இந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி லோவைக் கைது செய்தனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் சிங்கப்பூருக்கு கொண்டு வரப்பட்டார்.
நகைகளும் அவற்றை விற்றதன் மூலம் கிடைத்த பணமும் மீட்கப்படவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நம்பிக்கை மோசடி குற்றத்திற்காக, லோவுக்கு 15 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.