சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இணையப்பக்கம் ஒன்றில் இடம்பெறும் தகவல் குறித்து சிங்கப்பூர் நாணய ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘பிட்காயின்’ எனும் மின்னிலக்க நாணயத்தில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், பிரதமர் லீ சியன் லூங் கூறியதாகச் சொல்லி சில கருத்துகளை இந்த இணையப்பக்கம் வெளியிட்டிருந்தது.
ஆனால், திரு லீயுடன் தொடர்பு படுத்தப்பட்ட அந்தக் கருத்துகள் முற்றிலும் பொய்யானவை என்று ஆணையம் நேற்று தெரிவித்தது.
“வாசகர்களின் கடன்பற்று அட்டை அல்லது வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற இணையப்பக்கம் முற்படுகிறது. வர்த்தகத் தளம் எனக் கூறப்படும் ஒன்றில் கட்டணத்தைச் செலுத்துமாறும் அது கோருகிறது,” என்று ஆணையம் எச்சரித்தது.
இந்தப் பொய்யான இணையப் பக்கத்தில் இணைக்கப்பட்டிருக்கும் படிவங்களில் வங்கி அல்லது தனிப்பட்ட விவரங்கள் வழங்கு
வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்குரிய முதலீடுகள் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றி தெரிய வந்தால் அவற்றைக் காவல்துறையிடம் புகாரளிக்கும்படியும் ஆணையம் அறிவுறுத்தியது.