செயிண்ட் பேட்ரிக்ஸ் பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன் 1969ல் படித்த மாணவர்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் இம்மாதம் 15ஆம் தேதி சிங்கப்பூர் கிரிக்கெட் மனமகிழ் மன்றத்தில் ஒன்றுகூடி தங்களை இந்த நிலைக்கு முன்னேற்றிய 13 ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள்.
அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்த பழைய மாணவர்கள் சிலர், சென்ற டிசம்பரில் ஒன்றுகூடினர். அப்போது அவர்கள் கூடுமான வரையில் பலரையும் திரட்டி 50வது ஆண்டை ஒன்றுகூடும் ஆண்டாகக் கொண்டாடுவது என்று முடிவு செய்தார்கள்.
சேர்ந்து படித்தவர்களில் சிலர் மரணம் அடைந்துவிட்டனர். சிலருடன் தொடர்புகொள்ள முடியவில்லை. முக்கிய பணிகள் இருப்பதாகக் கூறி சிலர் ஒன்று கூடல் நிகழ்ச்சிக்கு வர இயலாது என்று தெரிவித்துவிட்டார்கள்.
கடைசியில் 50க்கும் மேற்பட்டவர்களே திரண்டனர். ஏற்பாட்டுக் குழுவின் தலைவரான வெஸ்லி டிராஞ்சோ, 66, சிங்கப்பூர் ஆயுதப்படையில் பிரிகேடியர் ஜெனரலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
மொத்தம் 130 மாணவர்களையும் 15 ஆசிரியர்களையும் ஒன்றுதிரட்ட முயன்றதாக இவர் கூறினார். அனைவரும் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு உறவைப் புதுப்பித்து மகிழ்ந்தனர்.