தேசிய தினப் பேரணி உரை 2019 - தீவின் தெற்கே ஏராளமான வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றோடு பொழுதுபோக்கிற்கும் இடம்

தேசிய தினப் பேரணி உரை 2019 - தீவின் தெற்கே ஏராளமான வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றோடு பொழுதுபோக்கிற்கும் இடம்

3 mins read
c2d90e49-d90f-4093-9386-1089a7321b59
-

எதிர்கால பரந்த தென் நீர்முகப்பு வட்டார பிரம்மாண்ட மேம்பாடு எப்படி இருக்கும் என்பதை பிரதமர் லீ தமது பேரணி உரையில் படங்களுடன் விளக்கினார்.

இந்தப் பகுதி குறித்து 2013 தேசிய தினப் பேரணி உரையில் குறிப்பிட்டிருந்த பிரதமர், அப்பகுதிக்கான உறுதியான திட்டங்களை நேற்று அறிவித்தார்.

அப்பகுதியில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளும் கட்டப்படும் என்பதை முதல்முறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெப்பல் கோஃல்ப் கிளப்பின் குத்தகைக் காலம் இரண்டாண்டில் முடிந்ததும் அப்பகுதி வீடமைப்புப் பேட்டையாக மேம்படுத்தப்பட உள்ளது. அங்கு 9,000 வீவக மற்றும் தனியார் வீடுகள் அமையும்.

பரந்த தென் நீர்முகப்புப் பகுதியின் முதல் மேம்பாடாக இது அமையும் என்று திரு லீ கூறினார்.

இந்தப் பகுதியின் மற்ற இடங்களிலும் வீவக, தனியார் வீடுகள் கட்டப்படும். திறந்தவெளி, பசுமைப் பூங்காக்கள், நீர்முகப்பு ஆகியனவும் அமையும்.

"இதனை தென் நீர் முகப்புப் பகுதியின் பொங்கோல்," எனலாம் என்றார் பிரதமர்.

சிங்கப்பூரின் தெற்குக் கரையோரமாக அமையுள்ள இப்பகுதி, கரையோர பூங்காக்களின் கிழக்குப் பகுதியில் இருந்து பாசிர் பாஞ்சாங் வரையில் 30 கிலோ மீட்டர் நீளத்தில் அமையவுள்ளது.

2,000 ஹெக்டர் நிலப்பரப்பு. இது பொங்கோலை விட இரு மடங்கும் மரினா பேயைவிட ஆறு மடங்கும் பெரியது.

சிங்கப்பூர் துறைமுக ஆணையம், தஞ்சோங் பகார், கெப்பல், பிரானி ஆகிய இடங்களில் உள்ள நகர் பகுதி முனையங்களை 2017ஆம் ஆண்டுக்குள் துவாசுக்கு மாற்றி விடும். அதேபோல் பாசிர் பாஞ்சாங் முனையம் 2040க்குள் இடம்மாற்றப்படும்.

இது தென் நீர் முகப்பு பகுதியை வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் பொழுதுபோக்கவும் சிறந்த இடமாக உருவாக்குவதற்கான வாய்ப்பாக அமையும் என்றார் அவர்.

வீடமைப்புடன் இங்கு வர்த்தகப் பகுதியும் இடம்பெறும்.

லேபரடோர் பார்க் அருகே ஏற்கெனவே கூகல், சிஸ்கோ, யூனிலிவர் போன்ற பெரிய நிறுவனங்கள் உள்ளன. பரந்த தென் நீர்முகப்பில் மேலும் அதிகமாக அலுவலக இடங்கள் உருவாக்கப்படும்.

மக்கள் வாழும் இடத்துக்கு அருகிலேயே வேலையிடங்களும் அமையும். அதனால் இந்த வட்டாரம் பகலிலும் இரவிலும் வாழ்க்கையும் நடவடிக்கைகளும் நிறைந்து துடிப்புடன் இருக்கும்.

அத்துடன், உல்லாசம், பொழுதுபோக்கிற்கும் இங்கு ஏராள வசதிகள் அமையவுள்ளன.

செந்தோசா அருகே உள்ள செயின்ட் ஜான்ஸ் மின்சக்தி நிலையம் இரவு நேர பொழுதுபோக்கு இடமாக்கப்பட்டதுபோல, பாசிர் பஞ்சாங்கிலுள்ள இரு பழைய மின்சக்தி நிலையங்களும் பொழுதுபோக்கு இடங்களாக மாற்றப்படும்.

மேலும் பரந்த தெற்கு நீர்முகப்புப் பகுதிக்கு சுற்றியுள்ள பசுமை வட்டாரங்களுடன் இணைப்புப் பாதைகள் அமைக்கப்படும்.

வெஸ்ட் கோஸ்ட் பார்க்கிலிருந்து ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கிற்கு இணைப்புப் பாதை அமையவுள்ளது.

ரயில் பசுமைப் பாதை, செந்தோசா ஆகியவற்றையும் இப்பாதை இணைக்கும்.

தீவின் நகரத்தில் கட்டியெழுப்பப்படவுள்ள இந்த புதிய பசுமை வட்டாரத்துடன் பூங்கா நகரமாக உள்ள சிங்கப்பூர் மேலும் விரிவடையும்.

எதிர்காலச் சந்ததியினர் தங்களது கனவுகளைக் கட்டி எழுப்பவும் அடையாளங்களைப் பதிக்கவும் இந்த நகரப் பகுதியில் இடமிருக்கும் என்று பிரதமர் லீ தெரிவித்தார்.