சூரியனையும் கடலையும் நேசிக்கும் நிதி ஆலோசகரான 42 வயது திரு கெல்வின் பொக், தனது ஓய்வு நேரத்தில் நீர்நிலை விளையாட்டுகளில் அதிகமாக ஈடுபடுவார். ஆறு மாதங்களுக்குமுன் ஈஸ்ட் கோஸ்ட் பேஷன் வேவ் வெறும் ஆறு உறுப்பினர்களுடன் தொடங்கிய புதுவிதமான தன்னார்வக் குழுவைப் பற்றி கேள்விப்பட்டவுடன், திரு பொக் உடனடியாக அதில் சேர்ந்துகொண்டார்.
நின்றுகொண்டே படகோட்டும் (stand-up paddling) புதிய குழுவில் இப்போது 36 உறுப்பினர்கள் உள்ளனர். புதிதாகப் படகோட்டக் கற்றுக்கொள்பவர்கள் சக ஆர்வலர்களைச் சந்தித்து ஒருவர் மற்றவரிடமிருந்து கற்றுக்கொள்ள இந்தத் தன்னார்வக் குழு வழிவகுக்கிறது.
மக்கள் கழகம் நடத்தும் பேஷன் வேவ், சமூகத்திற்காகப் பலதரப்பட்ட நீர்முகப்புத் திட்டங்ளை வழங்குகிறது. பேஷன் வேவ் அதன் ஈஸ்ட் கோஸ்ட் கிளையில் 2017ஆம் ஆண்டு நின்றுகொண்டு படகோட்டும் பயிற்சி வகுப்பை அறிமுகப்படுத்தியது. இதுவரை கிட்டத்தட்ட 390 பேர் இப்பயிற்சியைப் பெற்றுள்ளனர். இவ்வாண்டு தொடக்கத்தில் பாசிர் ரிஸ் கிளையிலும் இந்த வகுப்பு தொடங்கப்பட்டது.
ஈஸ்ட் கோஸ்ட்டில் தொடங்கப்பட்ட நின்றுகொண்டு படகோட்டும் தன்னார்வக் குழு ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஒன்றுகூடி பயிற்சி செய்கிறது.
இந்தத் தன்னார்வக் குழுவில் சேர விரும்புவோர் பேஷன் வேவ் நடத்தும் ஆரம்பப் பயிற்சியை முடித்திருக்கவேண்டும் அல்லது தங்களுக்கு ஏற்கனவே திறன் இருப்பதற்கான ஆதாரத்தைக் காட்டவேண்டும்.
நின்றுகொண்டு படகோட்டும் தன்னார்வக் குழு, கரையோரங்களைச் சுத்தப்படுத்தும் பசுமை முனைப்புகளுக்குத் திட்டமிட்டு, அவற்றில் பங்கெடுத்து வருகிறது. நின்றுகொண்டு படகோட்டும்போது பார்வையில் தென்படும் குப்பைகளைக் குழுவினர் பொறுக்கி எடுக்கின்றனர்.
“சுத்தப்படுத்தும் நடவடிக்கை என்னைச் சுற்றுப்புறத்தோடு இணைக்கிறது. இவ்வளவு குப்பைகளைக் காணும்போது சுற்றுப்புறத்திற்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற உணர்வு எழுகிறது,” என்றார் திரு பொக்.
“கடற்கரையின் ஒரு பகுதியைச் சுத்தம் செய்தபிறகு, சில மணி நேரத்தில் மறுபடியும் அங்கு குப்பைகளைக் காண்பீர்கள். ஆனால், நாங்கள் எங்களால் முடிந்தவரை எங்கள் பங்கைச் செய்கிறோம்,” என்றார் அவர்.