ஷெல் நிறுவனம், மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றும் சேவையை வழங்கும் சிங்கப்பூரின் முதல் எரிபொருள் விற்பனை நிறுவனமாகியுள்ளது.
61 செங்காங் ஈஸ்ட் ரோட்டிலுள்ள ஷெல் பெட்ரோல் நிலையத்தில் தற்போது 50 கிலோவாட் ‘டைரெக்ட் கரண்ட்’ (டிசி) அதிவேக மின்னேற்றச் சாதனம் செயல்படுகிறது. இந்த முறையை பிரிட்டன், நெதர்லாந்து, சீனா ஆகிய நாடுகளிலுள்ள தனது நிலையங்களில் ஷெல் ஏற்கெனவே சோதனை செய்திருக்கிறது.
சிங்கப்பூரிலுள்ள மேலும் ஒன்பது ஷெல் நிலையங்களில் ‘ஷெல் ரீச்சார்ஜ்’ (Shell Recharge) எனப்படும் இந்தப் புதிய வசதி அமைக்கப்படும். ஷெல் நிறுவனத்திற்கு இந்நாட்டில் 57 பெட்ரோல் நிலையங்கள் உள்ளன.
ஆயினும், மற்ற நாடுகளைக் காட்டிலும் சிங்கப்பூரில் மின்-கார்களின் பயன்பாடு மிகவும் குறைவு. சிங்கப்பூரில் தற்போது சுமார் 1,100 மின்-கார்கள் மட்டுமே உள்ளன. இந்த எண்ணிக்கை, சிங்கப்பூரின் ஒட்டுமொத்த வாகன எண்ணிக்கையில் 0.1 விழுக்காட்டுக்கும் குறைவு.
‘ஷெல் ரீச்சார்ஜ்’ ஒரு கிலோவாட் மணி நேரத்திற்கு 55 காசு கட்டணம் விதிக்கிறது. இந்தக் கட்டணம், இங்குள்ள மற்ற அதிவேக மின்னேற்றிகளுக்கான கட்டணத்தைக் காட்டிலும் சற்று அதிகம்.
செளகரியத்தையும் பயணம் செய்வதற்கான எளிய வழிகளையும் விரும்பும் சிங்கப்பூரர்களின் தேவை பரிணமித்து வருகிறது. அந்தத் தேவையை நிறைவு செய்வதற்கான தனது உத்தியில் இந்தப் புதிய திட்டம் அங்கம் வகிப்பதாக ஷெல் தெரிவித்தது. அந்நிறுவனத்தின் கட்டமைப்பில் கிட்டத்தட்ட 60 விழுக்காடு புதுப்பிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள பகுதி இவ்வாண்டு இறுதிக்குள் புதுப்பிக்கப்படும்.
‘பேட்டரி’ எனப்படும் மின்கலன்களால் இயங்குகிற அத்தகைய கார்களில் இந்த அதிவேக மின்னேற்றி கிட்டத்தட்ட அரை மணி நேரத்தில் முழுமையாக மின்னேற்றம் செய்யும்.