பத்து மாத காலத்தில் 14 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் எழுவரைப் பாலியல் வன்புணர்வு செய்ததாக சீன ஆடவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
லின் ரோங்சின், 31, என்ற அந்த ஆடவர் காணொளி வழியாக நேற்று நீதிமன்ற விசாரணையில் முன்னிலை ஆனார். அவர் மீது மொத்தம் எட்டுக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
1008 தோ பாயோ நார்த்தில் உள்ள தொழிலகக் கட்டடம் ஒன்றின் ஏழாம் தளத்தில் உள்ள ஆடவர் கழிவறையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கும் இவ்வாண்டு ஜூன் மாதத்திற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பெண்கள் நால்வரை லின் வன்புணர்ந்ததாகக் கூறப்பட்டது. அவர்களுள் இருவருக்கு 14 வயது என்றும் மற்ற இருவரும் முறையே 17, 18 வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் லின்னுக்கு இருபது ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதம் அல்லது பிரம்படியும் விதிக்கப்படலாம்.

