ஏறக்குறைய $800,000 பெறுமானமுள்ள 16,000 போலி வாசனைத் திரவியங்களையும் முக ஒப்பனைப் பொருட்களையும் தருவித்து இருப்பில் வைத்திருந்ததன் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் இம்மாதம் 6ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். சிங்கப்பூர் போலிஸ் படையும் சிங்கப்பூர் சுங்கத்துறையும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கை ஒன்றில் இந்த விவரங்களைத் தெரிவித்தன.
கடந்த மாதம் 25ஆம் தேதி, 200க்கும் அதிகமான வாசனைத் திரவியங்களும் முக ஒப்பனைப் பொருட்களும் சுங்கத்துறையினரின் கண்காணிப்பின்போது அகப்பட்டன. இந்த வழக்கை சிஐடி எனப்படும் குற்றவியல் புலன்
விசாரணைப் பிரிவுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் மாற்றிவிட்டனர்.
சிஐடி அதிகாரிகள் பின்னர் போலியானவை என நம்பப்படும் அந்தப் பொருட்களைப் பறிமுதல் செய்து இதற்குப் பின்னணியில் இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்களைக் கைது செய்தனர். தெம்பனிஸ் நார்த் டிரைவிலும் சன்வியூ ரோட்டிலும் போலிசார் 19 மணி நேரம் நடத்திய அதிரடி சோதனைக்குப் பிறகு அந்தப் பெண்களைக் கைது செய்தனர். கைதான பெண்களில் ஒருவருக்கு 21 வயது, மற்றொருவருக்கு 23 வயது.
பிரபல வாசனைத் திரவியங்கள் மற்றும் ஒப்பனைப் பொருட்களின் போலி அடையாள முத்திரைகளைக் கொண்ட அந்தப் பொருட்களை இங்குள்ள இணைய விற்பனைத் தளங்களில் அந்தப் பெண்கள் விற்கத் திட்டமிட்டிருந்ததாக போலிசார் தெரிவித்தனர்.
“அறிவுசார் சொத்துரிமை அத்துமீறப்பட்டதை அதிகாரிகள் கடுமையான ஒன்றாகக் கருதுகின்றனர். இது தொடர்பான விதிமுறைகளை மதித்து நடக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஒருபோதும் தயங்க மாட்டார்கள்,” என்று சுங்கத்துறையும் போலிசும் கூறின.
வர்த்தகம் புரியும் நோக்கத்திற்காக போலி அடையாள முத்திரைகள் பதிக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி அல்லது விநியோகம் செய்ததாக குற்றம் நிரூபணமானால் குற்றவாளிக்கு ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது $100,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.