கண்ணாடி போத்தலால் 74 வயது முதியவர் தலையில் அடிபட்டு உயிரிழந்ததற்குக் காரணமானவரைத் தேடும் பணியில் போலிசார் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.
“ஸ்போட்டிஸ்ஊட் 18’ கூட்டுரிமை குடியிருப்பின் மேல் மாடியிலிருந்து அந்த மதுபான போத்தல் தூக்கி எறியப்பட்டது.
விரல் ரேகை மாதிரிகளுக்காக போலிஸ் அதிகாரிகள் தங்களை அணுகியிருந்ததாக அங்கு வசிப்பவர்கள் தெரிவித்தனர்.
நான்கு பேரப்பிள்ளைகளுக்குத் தாத்தாவான திரு நசியாரி சுனி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது உறவினரின் புதுமனை புகுவிழாவுக்காகச் சென்றபோது அவருக்கு இந்த அசம்பாவிதம் ஏற்பட்டது. சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் மறுநாள் உயிரிழந்தார்.
இந்த போத்தல் 35வது மாடியிலிருந்து வீசப்பட்டிருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் நம்புகின்றனர்.
மறைந்த நஸியாரி சுனிக்கு நேற்று இறுதிச் சடங்கு நடைபெற்றது.
“திடீரென அடுத்தடுத்து பெரும் சத்தம் கேட்டது, எங்களுடைய தந்தை நிலைகுலைந்து சாய்ந்துவிட்டார், அவரது தலையிலிருந்து ரத்தம் வழிந்தோடியது,” என்று நான்கு பிள்ளைகளில் மூத்தவரான திருமதி நாஸ் சுரியாட்டி நஸியாரி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.