சிங்கப்பூர்: சிட்டி ஹார்வெஸ்ட் தேவாலயத்தை நிறுவிய கொங் ஹீ, பல மில்லியன் வெள்ளி தேவாலய நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை முடிந்து வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) விடுதலையானார்.
திரு கொங் “தனது குடும்பத்தோடு, குறிப்பாக வயதான பெற்றோரோடு” நேரம் செலவிடுவதற்குச் சிறிது காலம் எடுத்துக்கொள்வார்” என தேவாலயத்தின் சபையும் மூத்த நிர்வாகமும் தேவாலய இணையத்தளத்தில் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. திரு கொங்கின் 55வது வயதுக்கு ஒருதினம் முன்பாக அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தேவாலய நிதியிலிருந்து 50 மில்லியன் வெள்ளியைத் தவறாகப் பயன்படுத்திய ஆறு தேவாலயத் தலைவர்களில் திரு கொங்குக்கே ஆக நீண்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவரது மேல்முறையீட்டின்போது எட்டு ஆண்டுகாலச் சிறைத் தண்டனை மூன்றரை ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.
திரு கொங் தனது தண்டனைக் காலத்தைத் தொடங்கி இரண்டு ஆண்டுகள், நான்கு மாதங்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். சிறைக் கைதிகளுக்கு நன்னடத்தைக்காக மூன்றில் ஒரு பகுதி தண்டனைக்காலம் குறைக்கப்படுவது வழக்கம். திரு கொங் தவிர, தேவாலயத்தின் மற்ற தலைவர்களின் தண்டனைக்காலமும் குறைக்கப்பட்டது. அவர்களில் நால்வர் சிறையிலிருந்து விடுதலையாகிவிட்டனர்.
மூன்று ஆண்டுகளும் நான்கு மாதங்களும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சியூ எங் ஹான் சிங்கப்பூரிலிருந்து தப்பிச்செல்ல முயன்றதால், அவரது தண்டனைக் காலம் 13 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. அவரே கடைசியாக விடுதலையாவார்.