‘ஹெல்த் டிராக்கர்’ எனப்படும் சுகாதாரக் கண்காணிப்புக் கருவிகளைத் தாங்களே வழங்க இருப்பதாகவும் அவற்றை சிங்கப்பூர் அரசாங்கம் தரவுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என்றும் ‘ஃபிட்பிட்’ நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
‘லிவ் ஹெல்த்தி எஸ்ஜி’ திட்டத்தில் பங்கெடுக்கும் வகையில் சுகாதார மேம்பாட்டு வாரியத்துடன் உடன்பாடு செய்துகொண்டுள்ளதாகக் கூறிய அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஃபிட்பிட்’ நிறுவனம் அறிக்கை மூலம் நேற்று தெரிவித்தது.
இந்தப் பங்காளித்துவம் மூலம், கடிகாரத்தைப் போன்று கைகளில் அணிந்துகொள்ளக்கூடிய ஒரு மில்லியன் ‘ஹெல்த் டிராக்கர்’ கருவிகளை விநியோகிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சுகாதார மேம்பாட்டு வாரியம் வழங்கவுள்ளதாகச் சில ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்தத் திட்டத்தில் பங்கெடுப்பவர்கள் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், அவர்களின் உடற்தகுதி பற்றிய தரவுகளை வாரியம் பயன்படுத்திக்கொள்ளும். அந்தத் தரவுகளை ஆராய்வதன்மூலம் சிங்கப்பூரில் அதிக செயல்திறன்மிக்க சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ளலாம் எனக் கூறப்பட்டது.
$158 விலைமதிப்புமிக்க ‘இன்ஸ்பையர் எச்ஆர் டிராக்கர்’ கருவியை இலவசமாகப் பெற வேண்டுமெனில், சிங்கப்பூரர்கள் ஃபிட்பிட் நிறுவனத்தின் ‘ஃபிட்பிட் பிரீமியம்’ எனும் மின்னிலக்கப் பயிற்றுநர் சேவைக்கு ஓராண்டு காலம் பதிந்துகொள்ள வேண்டும்.
ஒலிப்பதிவு, காணொளிகள் மூலமாக சந்தாதாரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் இந்த ‘ஃபிட்பிட் பிரீமியம்’ சேவையைப் பெறுவதற்கு மாதந்தோறும் $10 கட்டணம் செலுத்தவேண்டும். அதாவது, ஓராண்டு காலத்திற்கு $120 கட்டணம் செலுத்த வேண்டும்.
அடுத்த மாத மத்தியில் இருந்து சிங்கப்பூரர்கள் தங்களது பெயர்களைப் பதிவுசெய்து கொள்ளலாம்.
‘லிவ் ஹெல்த்தி எஸ்ஜி’ திட்–டம் அக்–டோ–பர் மாதத்–தில் அறி–மு–கம் காணும்.