பிரபல ‘ஸ்பைஸ்’ உணவகத்தின் ரிவர் வேலி கிளையில் காணப்பட்ட அபாயகரமான குறைபாடுகளே தீவிர இரைப்பைக் குடல் அழற்சி தொற்றுக்குக் காரணமாகி, அங்கு உணவு உண்ட ஆடவர் ஒருவரின் மரணத்திற்கு வித்திட்டது என்று மரண விசாரணை அதிகாரி கமலா பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அந்த உணவகத்தில் பணியாற்றிய 34 பேரில் எழுவர் குறித்து தேசிய சுற்றுப்புற வாரியத்தில் பதிவு செய்திருக்கவில்லை என்பதை திருவாட்டி கமலா கண்டுபிடித்தார். இது, அவர்கள் அடிப்படை உணவுச் சுகாதாரப் பயிற்சி வகுப்பில் பங்கெடுக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.
திரு முகம்மது ஃபத்லி முகம்மது சாலே, 38, என்ற ‘சேட்ஸ்’ அதிகாரி அந்த உணவகத்தில் உணவருந்திய பின் மாண்டுபோனது ‘துரதிர்ஷ்டவசமான சம்பவம்’ என திருவாட்டி கமலா குறிப்பிட்டார்.
அந்த உணவகத்தில் தயாரிக்கப்பட்ட ‘பென்டோ’ உணவுப் பொட்டலத்தில் சால்மனெல்லா கிருமித் தொற்று இருந்தது கண்டறியப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
“சுகாதாரக் குறைபாடுகளுடன், அந்த உணவகத்தின் இரண்டாம் தளத்தில் உரிமம் பெறாத இடத்தையும் உணவு தயாரிக்கப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது,” என்றும் அவர் சொன்னார்.
சென்ற ஆண்டு நவம்பர் 6ஆம் நாள், காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் அவ்வுணவகத்தில் 88 ‘பென்டோ செட்’ தயாரிக்கப்பட்டதாகவும் அவற்றில் 57 பொட்டலங்கள் காக்கி புக்கிட்டில் உள்ள ‘பிரிங்க்ஸ் சிஙகப்பூர்’ அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பாதுகாவல் சேவை வழங்கும் அந்த நிறுவனத்தில் தீபாவளி கொண்டாட்டத்திற்காக ‘ஸ்பைஸ்’ உணவகத்திடம் இருந்து உணவு பெறப்பட்டது. முற்பகல் 11.30 மணிக்கு அந்த உணவு அங்கு விநியோகம் செய்யப்பட்டது.
உணவு சுடச்சுட இருக்க வேண்டுமெனில் விநியோகித்த ஒரு மணி நேரத்திற்குள் அதைச் சாப்பிடவேண்டும் என்று ‘ஸ்பைஸ்’ உணவகம் வழங்கிய விவரப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்பின் அந்த உணவை அருந்தி, ஏதேனும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டால் அதற்குத் தான் பொறுப்பல்ல என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
அன்றைய நாளில் ‘பிரிங்க்ஸ் சிங்கப்பூர்’ அலுவலகத்தில் பணியில் அமர்த்தப்பட்ட திரு ஃபத்லியும் தீபாவளி கொண்டாட்டத்தில் பங்குகொண்டார். பிற்பகல் 2.53 மணிக்கு அவர் உணவுண்டார் என்றும் அதைத் தொடர்ந்து அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கடுமையான இரைப்பைக் குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டதால் பல்வேறு உடல் பாகங்கள் செயலிழந்துபோய், ஆறு நாள்களுக்குப் பிறகு அவர் உயிரிழந்துவிட்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை ரிவர் வேலி ‘ஸ்பைஸ்’ உணவகத்தில் தயாரிக்கப்பட்ட உணவை உண்ட 221 பேரில் 82 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது.
அதையடுத்து, அந்த உணவகக் கிளையின் உரிமம் 2018 டிசம்பரில் ரத்து செய்யப்பட்டது.