மலேசியாவைச் சேர்ந்த பரந்தாமன் என்ற பன்னீர் செல்வம் என்பவருக்குச் சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தியதற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
2017ல் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட அந்த நபருக்கு இந்த ஆண்டு மே மாதம் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால் அந்த முடிவை எதிர்த்து சட்டபூர்வமாக போராடப்போவதாக அந்தக் கைதி அறிவித்து உள்ளதால் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில், அவர் எழுதியதாகக் கூறி சில கட்டுரைகள் மலாய் மெயில் என்ற மலேசிய செய்தி இணையத்தளத்தில் வெளியிடப்பட்டன. ஆனால் அந்தக் கட்டுரைகளைத் தான் எழுதவில்லை என்று பன்னீர் செல்வம் சிங்கப்பூர் சிறைச்சாலைத் துறையிடம் தெரிவித்து இருக்கிறார்.
இதனையடுத்து மலேசிய ஊடகம் வெளியிட்ட பல கட்டுரைகளைப் பற்றி சிங்கப்பூர் சிறைச்சாலைத் துறை புலன்விசாரணை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அந்தக் கட்டுரைகளை பன்னீர் செல்வம் பெயரில் வேறு யாரோ எழுதி இருக்கிறார்கள் என்று இந்தத் துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.