மலேசியாவில் வாகனம் ஓட்டும் உரிமம் பெற கையூட்டுக் கொடுத்ததை சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் நேற்று ஒப்புக்கொண்டார். ஸாங் வெய்டா என்ற அந்த 35 வயது ஆடவர், போக்குவரத்து தொடர்பான 30 குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
போலி மலேசிய வாகன உரிம எண் பலகைகளைக் கொண்ட வாகனங்களை ஓட்டியது, கார் நிறுத்த குற்றங்களைப் புரிந்தது ஆகியவை அந்தக் குற்றச்சாட்டுகளில் அடங்கும்.
அவரது கறுப்பு நிற பிஎம்டபுள்யூ காரில் இரு மலேசிய வாகனமோட்டும் உரிமங்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு குற்றங்களுக்காக நிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
2009ஆம் ஆண்டில் மலேசிய வாகனமோட்டும் உரிமம் பெற தமக்கு முன்பின் தெரியாத ஒருவரிடம் ஸாங் 7,000 ரிங்கிட் கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.
கோலாலம்பூரில் உள்ள ஒரு நண்பர் அந்த நபரைத் தமக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும் மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் ஒருவரைத் தமக்குத் தெரியும் என்று அந்த நபர் கூறியதாகவும் ஸாங் சொன்னார். உரிமம் பெற மலேசியாவில் வாகனம் ஓட்டும் சோதனைக்கு தாம் செல்லவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

