தொடக்கப்பள்ளியின் துணை முதல்வர் ஒருவர், 14 வயது மாணவனைப் பாலியல் செயல்களில் ஈடுபடுத்தத் தொடங்கினார்.
சிங்கப்பூரில் மாணவனின் பாதுகாப்பாளராகப் பொறுப்பேற்ற பிறகும், துணை முதல்வரின் தகாத செயல்கள் மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ந்தன.
அந்த மாணவனுக்குச் சுமார் ஒன்பது வயதாக இருந்தபோது, அவனும் அவனது அம்மாவும் 1999ஆம் ஆண்டு சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தனர்.
பிற்பாடு, சிங்கப்பூரில் சட்டவிரோதமாக வேலை செய்ததற்காகத் தாயார் சீனாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். அந்த மாணவன் துணை முதல்வரின் வீட்டில் குடியேறினான்.
பாலியல் குற்றங்கள் 2003ஆம் ஆண்டு முதன்முதலில் பள்ளியில் தொடங்கின. பிறகு 2006 வரை துணை முதல்வரின் உட்லண்ட்ஸ் வீட்டில் தொடர்ந்தன.
பாதிக்கப்பட்ட மாணவனுக்கு இப்போது 30 வயது. சிங்கப்பூர் குடியுரிமை பெற்றுவிட்ட அவர், 2015ல் போலிசாரிடம் புகார் செய்தார்.
தற்போது 57 வயதாகும் துணை முதல்வர், வயதுவராத சிறுவனைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தியதாக மாவட்ட நீதிபதி சே யுவன் ஃபாட் நேற்று தீர்ப்பளித்தார்.
இயற்கைக்கு மாறான சிற்றின்பத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டும் நிரூபனமானது.
பாதிக்கப்பட்ட மாணவனின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காகத் துணை முதல்வரின் பெயர் வெளியிடப்படவில்லை.
அவர் 2015 டிசம்பரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் கல்வி அமைச்சு தெரிவித்தது. அவருக்கு செப்டம்பர் 24ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.

