அபாயகரமான பொருட்களை சுத்திகரிக்கும் நிலையத்தில் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறிய நிறுவனத்துக்கு 230,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எண் 23 துவாஸ் வியூ சர்க்யூட்டில் இக்கோ ஸ்பெஷல் வேஸ்ட் மேனேஜ்மண்ட் என்ற அந்த நிறுவனம் செயல்படுகிறது.
கடந்த 2017 பிப்ரவரி 23ஆம் தேதி மாலை 6.10 மணியளவில் திரவ ஹெக்ஸேனை ஊழியர் ஒருவர் வெளியேற்றிக் கொண்டிருந்தபோது திடீர் தீ மூண்டது.
அப்போது தீயை அணைக்க ஊழியர்கள் கடுமையாக முயற்சி செய்தனர். ஆனால் தீயை அவர்களால் அணைக்க முடியவில்லை. இதனால் மற்ற இடங்களுக்குப் பரவி தீப்பற்றக்கூடிய திரவங்களிலும் தீப்பற்றியது. அங்கிருந்த அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
சுமார் 11.00 மணியளவில் தகவலறிந்து அங்கு வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் யாரும் காயம் அடையவில்லை. ஆனால் அபாயகரான கழிவுகளைச் சுத்திகரிக்கும் நிலையத்துக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. இதன் தொடர்பில் மனிதவள அமைச்சு விசாரணை நடத்தியதில் ஆபத்தான சூழ்நிலையில் ஊழியர்கள் வேலை பார்த்தது தெரிய வந்தது. தீப்பற்றக்கூடிய திரவ ஹெக்ஸேனைப் பாதுகாப்பாக பிளாஸ்டிக் தொட்டிகளில் சேமித்து வைக்க முடியுமா என்பதையும் அந்த நிறுவனம் கவனிக்கத் தவறிவிட்டது. வேலை நேரத்தில் தீப்பற்றக்கூடிய மற்றொரு திரவமும் தரையில் சிந்தியிருந்தது. மனிதவள அமைச்சின் மூத்தஅதிகாரியான கோ ஹெங் ஹுவாட், அபாயகரமான கழிவுகளைச் சுத்திகரிக்கும் நிறுவனங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம் என்றார்.
"ஊழியர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது நிறுவனத்தின் கடமை," என்றார் அவர்.

