இரு பெண்களை மானபங்கம் செய்த குற்றத்திற்காகக் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த ஆடவர், பெண்களுக்கான கழிவறையில் நிர்வாணமாகக் காட்சியளித்ததோடு, 12,000 வெள்ளிக்கும் மேலான திருட்டுகளையும் புரிந்தார்.
இந்தக் குற்றங்களுக்காக, ஜீ சாய் சாய் என்ற அந்த வேலையில்லாத ஆடவருக்கு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) 15 மாதங்களும் ஆறு வாரங்களும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த 24 வயது ஆடவர் ஆறு திருட்டுக் குற்றச்சாட்டுகளையும், மானபங்கம் தொடர்பான இரு குற்றச்சாட்டுகளையும் புதன்கிழமை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். மேலும் 24 குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.
ஜீ சற்று மனவளர்ச்சி குன்றியவராக இருந்தாலும், அதற்கும் குற்றச்செயல்களுக்கும் "குறிப்பிடத்தக்கத் தொடர்பில்லை" என மனநல மருத்துவமனையின் அறிக்கை காட்டுவதாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கோ சூ ஜீன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

