ஆசியான் தன்னுடைய நடுநிலைத் தன்மையைப் பலப்படுத்தவேண்டும். ஒருங்கிணைப்பு முயற்சிகளை இரண்டு மடங்காக்க வேண்டும். இவற்றைச் செய்தால்தான் ஆசியான் தாக்குப்பிடித்து நிற்கக்கூடிய, கவர்ச்சிகரமான பொருளியல் பங்காளியாகத் திகழ முடியும் என்று வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்து இருக்கிறார்.
ஆசியானின் நடுநிலைத் தன்மையைச் சாதிக்க பிணைப்பு, கடப்பாடு, நம்பிக்கை, நிலைத்தன்மை ஆகியவை மிக முக்கியமானவை என்றார் அவர். சிங்கப்பூர் அனைத்துலக விவகாரக் கழகத்தின் 12வது ஆசியான் மற்றும் ஆசிய கருத்தரங்கைத் தொடங்கிவைத்து அமைச்சர் உரையாற்றினார்.
‘சீனா-அமெரிக்கா பிரச்சினையும் ஆசியானும்: உயிர்பிழைப்பது, உருமாறுவது, வெற்றிபெறுவது’ என்ற கருப்பொருளுடன் அந்தக் கருத்தரங்கம் நடந்தது.
உலக சூழ்நிலை எப்படி இருந்தாலும் ஆசியான் உறுப்பு நாடுகள் ஜனரஞ்சகமான கொள்கைகளையும் நெருக்கடிகளையும் எதிர்க்கவேண்டியது முக்கியம் என்றாரவர்.
தீர்வையில்லா நிலைக்கு ஏற்படக்கூடிய தடைகளை அவர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார்.
இது சிக்கலான ஒரு விவகாரம் என்றும் இதற்குத் தீர்வுகாண அரசியல் உறுதி தேவை என்றும் திரு சான் கூறினார்.
இந்த வட்டாரத்தின் வாய்ப்புகளைத் திறந்துவிடவும் ஆகச் சிறிய நிறுவனங்கள் பூகோள ரீதியிலான கட்டுப்பாடுகளைக் கடந்து செயல்பட அனுமதிக்கவும் கணினித் தகவல், நிதித்துறை, தொழில்நுட்பம், ஆற்றல், ஒழுங்குமுறை ஆகிய கண்கூடற்ற தொடர்புகளை ஆழப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
உணவு, மருந்து, அறிவுச்சொத்து போன்ற துறைகளின் தரங்களையும் முறைகளையும் ஒழுங்குப்படுத்தவேண்டிய தேவை பற்றியும் அமைச்சர் திரு சான் கருத்துரைத்தார்.