சிங்கப்பூரின் தென் தீவுகளைத் தொலைதூரத்தில் இருந்து கண்காணித்துப் பராமரிப்பதற்காக ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தி சோதனை நடக்கிறது.
அறிவார்ந்த நாடு என்ற திட்டத்தின் பகுதியாக நாடு முழுவதும் அதிநவீன உணர்வுச் சாதனங்கள் கட்டமைப்பை உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆறுமாத சோதனை நடக்கிறது.
இதில் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆளில்லா வானூர்திகள் கட்டுப்படுத்தப்படும். அவை அதே நேரத்தில் தொலைதூரத்துக்குக் காணொளிப் படங்களை அனுப்பிவைக்கும்.
சிங்கப்பூர் நில ஆணையம், சிங்கப்பூர் அரசாங்க தொழில்நுட்ப அமைப்பு, சிங்கப்பூர் சிவில் போக்குவரத்து ஆணையம் ஆகிய மூன்று அரசாங்க அமைப்புகளும் இந்தச் சோதனையின் பின்னணியில் இருந்து செயல்படுகின்றன.
இதனிடையே, இது பற்றி கருத்துரைத்த நில ஆணையத்தின் நிலத்துறை நடவடிக்கை பிரிவின் உதவி தலைமை நிர்வாகியான தோங் வாய் லின், சுமார் 11,000 ஹெக்டர் பரப்பளவுள்ள அரசாங்க நிலத்தைக் கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் தனது ஆணையம் ஆளில்லா வானூர்திகளையும் உணர்வுச் சாதனங்களையும் பயன்படுத்தி வருவதாகக் கூறினார்.
இருந்தாலும் தென் தீவுகளைப் பொறுத்தவரையில் கம்பியில்லா இணையத் தொடர்பு சரிவர கிடைக்காததால் ஆளில்லா வானூர்திகள் அங்கு இதுவரை சோதித்துப் பார்க்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

