மோசடிகளுடன் தொடர்புள்ள சந்தேகத்திற்குரிய வங்கிக் கணக்குகளை இப்போது சில நாட்களுக்குள் முடக்கிவிட முடியும். சிங்கப்பூர் போலிஸ் படைக்கும் இங்குள்ள மூன்று பெரிய வங்கிகளுக்கும் இடையிலான கூட்டுச் செயல்பாடு இதற்கு வழிவகுக்கிறது.
பணமாற்றுகளை இவ்வாறு தடுப்பதன்வழி, மோசடிக்காரர்களின் நடவடிக்கைகளுக்கு இடையூறு உண்டாக்கி, மோசடிக்கு இலக்காவோரின் இழப்புகளைக் குறைப்பது போலிசாரின் மோசடி தடுப்பு நிலையத்தின் இலக்கு.
மோசடி தடுப்பு நிலையம் ஜூன் 18ஆம் தேதி அமைக்கப்பட்டது. இதுவரை மின்-வணிக மோசடிகள், கடன் மோசடிகள் தொடர்பாகச் செய்யப்பட்ட சுமார் ஆயிரம் போலிஸ் புகார்கள் நிலையத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
மோசடியுடன் தொடர்புள்ள 815 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. மோசடிகளில் பறிகொடுக்கப்பட்ட 2.4 மில்லியன் வெள்ளியில் சுமார் 850,000 வெள்ளியை அல்லது 35 விழுக்காட்டை மீட்பதற்கு இது வழிவகுத்தது.
மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் கைபேசி எண்களைத் துண்டிப்பதற்குத் தொலைத்தொடர்பு நிறுவனங்களோடும் நிலையம் சேர்ந்து செயல்படும். அதோடு, மோசடிக்காரர்களின் நடவடிக்கைகளுக்கு இடையூறாக “பயன்மிக்க நடவடிக்கைகளையும்” கண்டறியும்.
நிலையத்தின் அமைவிடம் இவ்வாண்டு பிற்பகுதியில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்படும்.