சிங்கப்பூருக்கும் மலேசியாவின் பினாங்கு மாநிலத்திற்கும் இடையே பொருளியல் வளர்ச்சியைப் பொறுத்தவரை பல ஒற்றுமைகள் இருப்பதை வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் சுட்டியுள்ளார்.
இரு நாள் மலேசியப் பயணத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அவர் இந்தக் கருத்தை முன்வைத்தார்.
உயர் தொழில்நுட்பப் பொருட்களை உற்பத்தி செய்வது, தளவாட மையங்களாக திகழ்வது, சேவைத் துறையை மேம்படுத்துவது உள்ளிட்ட அம்சங்களில் சிங்கப் பூரும் பினாங்கும் செயல்பட்டு வருவதாக டாக்டர் விவியன் சொன்னார்.
செய்தியாளர்களிடம் பேசுவதற்கு முன்னதாக பினாங்கு முதல்வர் சோவ் கோன் இயாவ்வை டாக்டர் விவியன் சந்தித்தார்.
"பினாங்கு மாநிலத்தின் பொருளியல் எப்படி வளர்கிறது என்பதை முதல்வர் என்னிடம் விளக்கினார். பினாங்கு தளவாடத் துறையில் தேவை பெரிதும் அதிகரித்துள்ளதை நான் உணர்ந்தேன்," என்றார் அவர்.
மலேசியத் தலைவர்கள் உடனான ஈடுபாட்டை வலுப்படுத்த சிங்கப்பூர் முன்னெடுத்து வரும் முயற்சிகளில் ஒரு பகுதியாக டாக்டர் விவியனின் மலேசியப் பயணம் அமைகிறது.

