ப. பாலசுப்பிரமணியம்
மொழி விருப்பப்பாடத் திட்டத்தின்கீழ் தமிழ் படிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டிற்குக் கற்றல் பயணம் மேற்கொள்வர். தமிழ்மொழியையும் கலாசார வரலாற்றையும் அறிந்துகொள்ள அங்குள்ள அகழாய்வுப் பகுதிகளுக்குச் சென்று கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட புராதன பொருட்களைக் காண்பர்.
இவ்வாறெல்லாம் மொழி விருப்பப்பாடத் திட்டம், மாணவர்கள் உயர்ந்த மொழி வளத்தை அடைய ஆதரவளிப்பதோடு தமிழ் இலக் கியத்தையும் கலாசாரத்தையும் அவர்கள் ஆழமாகப் புரிந்துகொள்ளவும் வழிவகுக்கும் என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.
தமிழ் முரசு நாளிதழ், சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஆகியவை இணைந்து நடத்திய 'நல்லாசிரியர் விருது 2019' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஓங், இத்திட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள், இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகள், முகாம்கள், வெளி
நாட்டுக் கல்விப் பயணங்கள் போன்றவற்றில் ஈடுபடுவர் எனக் கூறினார்.
"இருமொழிப் புலமை கொண்டிருப்பது வாழ்வுக்கான வரப்பிரசாதம். அதன் மகத்துவத்தை உணர்ந்து இளையர்கள் மொழியைக் கட்டிக்காப்பர். மாணவர்கள் தங்கள் தாய்மொழியை மேலும் ஆழமாகக் கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் கல்வி அமைச்சு மொழி விருப்பப்பாடத் திட்டத்தை உயர்நிலைப் பள்ளிக்கும் விரிவாக்கம் செய்கின்றது. தமிழ்மொழிக்கென, மூன்று உயர்நிலைப் பள்ளி
களிலும் இரண்டு தொடக்கக்கல்லூரிகளிலும் இந்த விருப்பப்பாடத் திட்டம் அடுத்த ஆண்டிலிருந்து செயல்படும்," என்று விவரித்தார் அமைச்சர் ஓங்.
புதிய தமிழ்மொழி விருப்பப்பாடத்திட்ட நிலையங்களை உருவாக்கும் ஆரம்பகட்டப் பணி தற்போது நடந்துகொண்டிருப்பதாகக் கூறிய அவர், இத்திட்டத்தைப் பற்றி விவரிக்கும் கலந்துரையாடல்களில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபெற்றனர் என்றும் குறிப்பிட்டார்.

