போலிசிடமிருந்து தப்பிக்க பூகிஸ் வட்டாரத்தில் ரோச்சோர் கால்வாய்க்குள் குதித்த குடிபோதையில் இருந்த ஆடவர் ஒருவருக்கு நேற்று ஐந்து நாட்கள் சிறைத் தண்டனையும் $2,500 அபராதமும் விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி ராஜேந்திரன் பிரகாஷ், 27, மது அருந்திக்கொண்டு இருந்தார். பிற்பகல் 1 மணியளவில், ஓஃபியர் சாலையில் உள்ள தேவாலயம் ஒன்றுக்குள் நுழைந்த அவர், அங்கிருந்த மாது ஒருவரின் கையை உரசினார்.
இச்சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர், ராஜேந்திரனைவிட்டு நகர்ந்திருக்குமாறு அந்த மாதுக்கு அறிவுறுத்தினார். அப்படி இருந்தும் அந்த மாதைப் பின்தொடர்ந்து அவருக்கு ராஜேந்திரன் தொந்தரவு விளைவித்தார். ராஜேந்திரன் மது அருந்தியதைச் சந்தேகித்த ஆடவர் ஒருவரின் கன்னத்தில் அவர் அறைந்தார்.
வழிபாட்டுத்தலம் ஒன்றில் தகாத முறையில் நடந்து கொண்ட அவரை மற்றவர்கள் சேர்ந்து மடக்கிப் பிடித்தாலும் பின்னர் விடுவித்தனர்.
இது குறித்து போலிசிடம் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய ராஜேந்திரன், ரோச்சோர் கால்வாய்க்குள் குதித்தார். அதை அடுத்து போலிஸ் அதிகாரி ஒருவர் அக்கால்வாய்க்குள் குதித்து ராஜேந்திரனைப் பிடித்து அவரைக் கைது செய்தார்.

