சிலேத்தார் விமான நிலையத்தில் இன்று காலை தரையிறங்க முயன்ற ‘ஃபயர்பிளை’ நிறுவனத்தின் விமானம், கனமழை காரணமாக அவ்வாறு செய்ய முடியாமல் திசைத்திருப்பப்பட்டது.
‘எஃப்எஃப்எம் 3122’ என்ற அந்த விமானம், சுபாங் விமான நிலையத்திலிருந்து காலை 6.50 மணிக்குப் புறப்பட்டது.
மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் ஜோகூரின் செனாய் விமான நிலையத்திற்குத் திசைத்திருப்பப்பட்டது.
சிங்கப்பூருடனான அந்நிறுவனத்தின் சேவைகள் ரத்து செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு, இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி ஃபயர்பிளை விமானம் முதன்முதலாகத் தரையிறங்கியதை அடுத்து இத்தகைய சம்பவம் மூன்றாவது முறையாக நிகழ்கிறது.
‘ஃபயர்பிளை’ தற்போது சுபாங்கிற்கும் சிலேத்தாருக்கும் இடையே ஆறு விமானச் சேவைகளை இயக்குகிறது.