சிங்கப்பூரில் பெருகி வரும் கழிவுகளை சமாளித்து கழிவுகளற்ற குடியரசாக மாற்றும் நோக்கத்துடன் புதிய மசோதா ஒன்று நாடாளுமன்றத்தில் இன்று இரண்டாவது வாசிப்புக்கு விடப்பட்டது.
இந்த மசோதா மூலம் பயன்பாட்டைக் குறைத்து, முக்கியமான உற்பத்தி நிறுவனங்களுக்கும் விற்பனை நிறுவனங்களுக்கும் மறுசுழற்சியைக் கட்டாயமாக்கி, கழிவுப் பொருட்களிலிருந்து எவ்வளவுக்கு எவ்வளவு பயன்பாட்டைப் பெற முடியுமோ அந்த அளவுக்கு பயன்பாட்டைப் பெற உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இது எப்படி சாத்தியம் என்றால், சாம்பலை கட்டுமானப் பொருட்களாக மாற்றுவது, தேவையற்ற மின்னிலக்க சாதனங்களில் இருக்கும் உலோகப் பாகங்களிலிருந்து தங்கம் போன்ற உயர் மதிப்புள்ளவற்றை திரட்டுவது, உணவுக் கழிவுகளிலிருந்து எரிசக்தி தயாரிப்பது போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம்.
இந்த மசோதாவை இரண்டாம் வாசிப்புக்கு தாக்கல் செய்த சுற்றுப்புற நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர், “வளங்கள் நீடித்து நிலைத்திருக்க உதவும் இந்த மசோதா மறுபயனீடு, மறுசுழற்சி போன்ற முக்கிய பொறுப்புகளை நிறுவனங்கள் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று என்ற ஒரு கட்டுக்கோப்பான முறைக்கு இந்த மசோதா முதல் தடவையாக செயல்வடிவம் தருகிறது,” என்று கூறினார்.
கழிவுகளை புதையலாக மாற்றுவதால், சிங்கப்பூருக்கு, உலக விநியோக முறையில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளிலிருந்து பாதுகாப்பு அளித்து, தொடர்ச்சியாக வளங்கள் கிடைக்க வழி செய்வதோடு அல்லாது புதிய பொருளியல், வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறது என்று அமைச்சர் விளக்கினார்.