ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழுத்தொகுதிகளை வாக்காளர்கள் பலர் விரும்பாததால் அவை வருங்காலத்தில் மறையலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், குழுத்தொகுதி மற்றும் தனித்தொகுதித் திட்டத்தில் செய்யப்படும் மாற்றங்கள் படிப்படியானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. கடந்த காலத்தில் இருந்த மூன்று உறுப்பினர் தொகுதிகள் மறுபடியும் அறிமுகம் செய்யப்படுவதற்கான சாத்தியம் குறைவு என்றும் கூறப்படுகிறது.
குழுத்தொகுதிகளின் சராசரி அளவைக் குறைக்க, தேர்தல் தொகுதி எல்லைகளையும் பிரிவுகளையும் மறுஆய்வு செய்யும் குழுவுக்குப் பிரதமர் லீ சியன் லூங் கடந்த மாதம் குறிப்பு அளித்ததை அடுத்து ஆய்வாளர்களின் கருத்துகள் வெளிவந்துள்ளன.
சிங்கப்பூரர்களின் இலட்சியங்களை இன்னும் நன்றாகப் பிரதிபலிக்கும் விதத்தில் தேர்தல் முறையை இன்னும் சமநிலைப்படுத்த அவர் சில மாற்றங்களை 2009ஆம் ஆண்டு சுட்டிக்காட்டியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து, சிங்கப்பூரின் ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கான சராசரி உறுப்பினர் எண்ணிக்கை 5.36லிருந்து 4.75க்குக் குறைந்துள்ளது.
ஏப்ரல் 2021ஆம் ஆண்டுக்குள் அடுத்த பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டும். அந்தத் தேர்தலில் ஆறு உறுப்பினர்கள் கொண்ட குழுத்தொகுதிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று அரசியல் கவனிப்பாளர் டெரக் டா சுன்ஹா தெரிவித்தார். இத்தகைய குழுக்கள் 1996ஆம் ஆண்டில் முதன்முதலாக உருவாக்கப்பட்டன. தற்போது, அங் மோ கியோ, பாசிர் ரிஸ்- பொங்கோல் குழுத்தொகுதிகளில் மட்டும் ஆறு உறுப்பினர்கள் உள்ளனர்.
நீதி, நியாயம் ஆகியவற்றைப் பற்றி அக்கறைப்படும் இளைய வாக்காளர்கள் இத்தகைய குழுத்தொகுதிகள் மலையேறுவதை விரும்புவதாக தேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பில்வீர் சிங் தெரிவித்திருக்கிறார். ஒரே தொகுதியில் இத்தனை பேர் இல்லாமல் இருப்பது போட்டியைச் சற்று சமநிலைப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
அதே நேரத்தில் மிகச்சிறிய குழுத்தொகுதிகளும் ஆளும் கட்சிக்கு மிகவும் அபாயகரமாகவும் ஆபத்தானதாகவும் இருப்பதாக இணைப் பேராசிரியர் சிங் கூறினார். ஒவ்வொரு குழுத்தொகுதியும் சுருங்கினால் சிங்கப்பூரில் அந்தத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை உயரும் என்று கூறிய அவர், இவை அனைத்தையும் வழிநடத்த இங்கு போதுமான அமைச்சர்கள் இல்லை என்றும் குறிப்பிட்டார்.