நிதி நிறுவனங்கள் விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்படுவதில் உள்ள சவால்களை சமாளிக்கவும் நிதி வர்த்தகத்தின் மோசடிகளை கண்டறியவும் புதிய அரசாங்க இணைய சேவை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் தேசிய மின்னிலக்க வர்த்தகத் தளத்தில் சேர்க்கப்பட்டுள்ள 'டிரேட் ஃபனான்ஸ் கொம்பிளையன்ஸ்' என்ற இந்த வசதியை சிங்கப்பூர் சுங்கத் துறை, சிங்கப்பூர் நாணய ஆணையம், நிதி நிறுவனங்கள் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன.
பணமோசடிக்கும்; பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளித்தலுக்கும் எதிரான முயற்சிகளில் ஒன்றாக இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வர்த்தகம் குறித்த நம்பகத்தன்மையான தரவுகள் இல்லாத நிலையில், நிறுவனப் பங்குகள் போன்ற பொருட்களின் விலையை சரிபார்ப்பதில் வங்கிகளுக்கு உள்ள சிக்கலை இந்தச் சேவை தீர்த்து வைக்கும் என்று சிங்கப்பூர் சுங்கத்துறை தெரிவித்தது.
முறையான தரவு நிர்வாகத்தை உறுதிசெய்யும் வகையில் வர்த்தகர்கள் தங்களது தரவுகளை தாங்கள் தேர்வு செய்யும் நிதி நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒப்புதல் வழங்கலாம்.
தற்போது 'டிரேட் ஃபனான்ஸ் கொம்பிளையன்ஸ்' சேவையில் ஒசிபிசி, டிபிஎஸ் வங்கி, யுஓபி, ஐசிபிசி, பிஎன்பி பரிபாஸ், எம்யுஎஃப்ஜி வங்கி ஆகியவை இணைந்துள்ளன.

