புதிய தேசிய தொற்றுநோய் நிலையத்தில் இருக்கும் நோயாளிகளும் வருகையாளர்களும் ஊழியர்களும் இடைவிடாமல் மின்னணுச் சாதனங்களால் கண்காணிக்கப்படுகிறார்கள்.
தொற்றுநோய் பரவும்போது பாதிக்கப்பட்ட ஒருவரையும் அந்த நோய் முதன்முதலாக உருவான இடம், காலம் முதலான பலவற்றையும் மருத்துவர்கள் உடனடியாக அடையாளம் கண்டுபிடிக்க புதிய நிலையம் உதவுகிறது.
தொற்றுநோய் பரவும்போது வேகம்தான் மிக முக்கியமான ஒன்று என்று இந்த நிலையத்தின் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் லியோ யீ சின் தெரிவித்தார்.
குறுகிய நேரத்திற்குள் பல்வேறு நபர்களுடன் கூடிய தொடர்புகளைக் கண்டுபிடித்துவிடலாம் என்றார் அவர். புதிய தேசிய தொற்றுநோய் நிலையத்தில் 330 படுக்கைகள் இருக்கின்றன.
சார்ஸ் நோய் பரவிய அளவுக்குத் தொற்றுநோய் பரவினால் அதைச் சமாளிக்கக்கூடிய ஆற்றலுடன் புதிய நிலையம் இருக்கிறது.
மோல்மீன் ரோட்டில் இருந்த பழைய தொற்றுநோய் நிலையத்திற்குப் பதிலாக இந்தப் புதிய நிலையம் உருவாகி இருக்கிறது.
சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் நேற்று புதிய நிலையத்தை அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார். தொற்றுநோய் ஏற்படும்போது அதை தேசிய அளவில் சமாளிக்க இந்த நிலையத்தின் பங்கு முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார்.
உலகின் பல பகுதிகளிலும் புதுப்புது நோய்கள் தோன்றுவதை அவர் சுட்டிக்காட்டினார். “சிங்கப்பூர் தொற்றுநோயை எதிர்த்துப் போராடக்கூடிய ஆற்றலைத் தொடர்ந்து பலப்படுத்தி வரவேண்டும். எப்பொழுதுமே முழு விழிப்பு நிலையில் இருந்துவர வேண்டும். இதைத்தான் புதுப்புது தொற்றுநோய்கள் நமக்கு நினைவூட்டுகின்றன,” என்றார் அமைச்சர்.
இந்தப் புதிய நிலையத்தின் ஆற்றல் ஏற்கெனவே மெய்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. சிங்கப்பூருக்கு ஏப்ரல் 28ஆம் தேதி வந்த நைஜீரிய ஆடவருக்கு இந்த நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணம் அடைந்ததை அமைச்சர் சுட்டினார்.
அந்த ஆடவர் ஒரு வகை அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். புதிய நிலையத்தில் மருந்தகப் பராமரிப்பு, பொது சுகாதாரம், பயிற்சி மற்றும் ஆய்வு வசதிகள் எல்லாம் இருக்கின்றன.
இந்த நிலையம் 2018 முதல் செயல்படத் தொடங்கியது. உலக சுகாதார நிறுவனம் போன்ற அனைத்துலக பங்காளித்துவ அமைப்புகளுடன் சேர்ந்து இந்த நிலையம் செயல்படும்.
“தொற்றுநோய் என்பது எல்லைகளுக்கு உட்பட்டது அல்ல. ஆகையால் இதில் முழுமை தற்காப்பு உத்தி தேவைப்படுகிறது.
“சமூகம் எப்போதுமே தயாராக இருக்கவேண்டியதும் பாதிப்பு ஏற்பட்டால் அதிலிருந்து விரைவில் மீண்டுவரக்கூடிய திறமையுடன் திகழவேண்டியதும் இதில் முக்கியமானது. இந்த ஆற்றல் சிங்கப்பூரில் மட்டும் இருந்தால் போதாது.
“நம் எல்லைகளுக்கு அப்பாலும் இருக்கவேண்டும்,” என்று அமைச்சர் திரு கான் குறிப்பிட்டார்.
புதிய நிலையத்தில் சிங்கப்பூரின் முதலாவது உயர்நிலைத் தடுத்துவைப்புப் பிரிவும் உள்ளது.
எபோலா வைரஸ் போன்ற மிகக் கடு–மை–யான தொற்–று–நோய் பாதிப்பு உள்–ள–வர்–கள் அந்–தப் பிரி–வில் தடுத்து வைக்–கப்–ப–டு–வார்–கள்.