அதிபர் ஹலிமா யாக்கோப் ஐந்து நாள் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டு பிலிப்பீன்ஸ் சென்று இருக்கிறார்.
சிங்கப்பூருக்கும் பிலிப்பீன்சுக்கும் இடையில் அரசதந்திர உறவு ஏற்பட்டு 50 ஆண்டுகள் ஆகின்றன. அதைக் குறிக்கும் வகையில் மணிலா சென்ற அதிபருக்கு நேற்று சடங்குபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிலிப்பீன்ஸ் அதிபர் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ளும் திருவாட்டி ஹலிமா, 14வது பிலிப்பீன்ஸ்-சிங்கப்பூர் வணிக மன்றக் கூட்டத்தில் உரை நிகழ்த்துவார்.
சிங்கப்பூரின் கெப்பல்லேண்ட் குழுமமும் பிலிப்பீன்சின் எஸ்எம் குழுமமும் சேர்ந்து உருவாக்கி உள்ள அலுவலக கட்டடத் தொகுதி ஒன்றின் திறப்பு விழாவில் அவர் கலந்துகொள்வார்.
பிலிப்பீன்சில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் இளையர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அதிபர், அனைத்து சமயங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தைப் பேணி வளர்ப்பதில் சிங்கப்பூருக்கு உள்ள அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வார்.
அதிபருடன் அமைச்சர்களும் அதிகாரிகளும் உடன் சென்று இருக்கின்றனர். அதிபரின் பயணத்தையொட்டி சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் தலைமையில் குழு ஒன்றும் அங்கு செல்லும்.

