சிங்கப்பூரும் பிலிப்பீன்சும் பொருளியல் ரீதியில் ஒன்றாகச் சேர்ந்து மேலும் பலவற்றைச் சாதிக்க முடியும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் மணிலாவில் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கிடையே அரசதந்திர உறவு ஏற்பட்டு 50 ஆண்டுகள் ஆவதையொட்டி அதிபர் ஹலிமா அந்த நாட்டுக்கு ஐந்து நாள் பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.
மணிலாவில் மலகானாங் அரண்மனையில் பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டேயுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர், இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகமும் முதலீடும் மேலும் பெருக வாய்ப்புகள் இருப்பதாகச் சொன்னார்.
இரு அதிபர்களும் இரு நாடுகளுக்கு இடையிலான வலுவான உறவை மறுஉறுதிப்படுத்தினர். ஆசியான் நிலவரங்கள் பற்றியும் அவர்கள் விவாதித்தனர்.
இதனிடையே,சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ் அமைப்புகளுக்கு இடையில் நேற்று எட்டு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டன.
நீர்வளம், வேளாண்-வர்த்தகம், வேளாண்மைத் தொழில்நுட்பம், தேர்ச்சிப் பயிற்சி, கல்வி, அறிவார்ந்த நகர் உள்கட்டமைப்பு வசதிகள், கணினித் தகவல் பாதுகாப்பு போன்ற பல துறைகளையும் உள்ளடக்கிய புரிந்துணர்வுக் குறிப்புகளில் இரு நாடுகளையும் சேர்ந்த அமைப்புகள் கையெழுத்திட்டன.
சிங்கப்பூரின் அதிபர் ஹலிமா யாக்கோப், பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே இருவரின் முன்னிலையில் மணிலாவில் மலகானாங் அரண்மனையில் அந்த உடன்பாடுகள் பரிமாறிக்க கொள்ளப்பட்டன.
ஆசியானில் அங்கம் வகிக்கும் ஒரு நாட்டுடன் கணினித் தகவல் பாதுகாப்பு தொடர்பிலான உடன்பாடு ஒன்றில் சிங்கப்பூர் முதன்முதலாக நேற்று கையெழுத்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, சிங்கப்பூர் தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம், பிலிப்பீன்சின் தேசிய தனிநபர் தகவல் ஆணையத்துடன் சேர்ந்து பல துறைகளில் ஒத்துழைக்கும்.
அறிவார்ந்த நகர்கள், நகர்ப் பகுதிகளில் குடியேற்றம், பருவநிலைப் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவது, தண்ணீர் வழங்கீடு, கழிவு நீர் அகற்றும் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தலைசிறந்த நடைமுறைகளையும் தொழில்நுட்ப ஆலோசனைகளையும் இருநாட்டு அமைப்புகளும் பகிர்ந்துகொள்ள வழி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.