சரியான பாதையில் இருந்து தவறி விடக்கூடிய ஆபத்துள்ள இளையர்களை நல்வழிப்படுத்த முன் கூட்டியே உதவியும் ஆதரவும் தேவை என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ வலியுறுத்திக் கூறி இருக்கிறார்.
அத்தகைய இளைஞர்கள் தவறான வழிகளைத் தேர்ந்தெடுத்து ஆபத்தில் சிக்குவதற்கான காரணங்கள் என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
அந்தப் பிரச்சினைகளுக்குக் கூடுமான வரையில் முன்கூட்டியே தீர்வுகாண வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
தவறான வழிகளில் செல்லாமல் இளைஞர்களைத் தடுப்பது, அவர்களை எட்டுவது, போதிப்பது, உதவிகளைச் செய்வது ஆகியவற்றின் மூலம் அத்தகைய சிறார்களை நல்வழிப்படுத்தி வாழ்வில் நல்ல தொடக்கத்தை அவர்கள் சாதிக்க உதவமுடியும் என்று திரு லீ குறிப்பிட்டார்.
இளைஞர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை முன்னதாகவே தடுப்பது எப்படி என்பது பற்றி நேற்று ஒரு கருத்தரங்கம் விவாதித்தது. அதில் அமைச்சர் உரையாற்றினார்.
‘தடுப்பு, மறுவாழ்வு, மீண்டும் குற்றச்செயல்’ பற்றிய தேசியக் குழு ஏற்பாட்டில் ‘இளையர் பற்றிய கலந்துரையாடல்’ என்ற தலைப்பில் நடந்த அந்தக் கருத்தரங்கில் சுமார் 650 பேர் கலந்துகொண்டார்கள்.
பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களிடம் கட்டொழுங்கை ஏற்படுத்தும் பொறுப்பில் உள்ள ஆசிரியர்கள், சமூக இளையர் தொண்டர்கள், சட்ட அமலாக்க அதிகாரிகள் பலரும் அவர்களில் அடங்குவர்.
இந்த தேசிய அமைப்பின் இணைத் தலைவருமான திரு லீ, பாதை மாறும் இளைஞர்களுக்கு முன்னதாகவே உதவி கிடைத்தால் அவர்கள் வாழ்வில் நல்ல நிலைக்குத் திரும்பி நல்வழியில் முன்னேற முடியும் என்று தெரிவித்தார்.
ஒருவருடைய பதின்ம வயதில் சூழ்நிலையும் குடும்பத்தினரும் அணுக்க நண்பர்களும் அவருடைய வாழ்வில் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஆதிக்கம் செலுத்துவார்கள்.
“தவறான வழியில் செல்லக்கூடிய ஆபத்து உள்ள இளைஞர்களும் இளம் குற்றவாளிகளும் சவால்மிக்க சூழ்நிலைகளை எதிர்நோக்குவது அடிக்கடி நிகழ்வதாகும். அவர்களுக்குக் குடும்ப ஆதரவு இல்லாமல் போகலாம். தவறான சேர்க்கை இருக்கக்கூடும்.
“கட்டுப்படுத்த முடியாத நிலையை எட்டிவிடக்கூடிய இத்தகைய நிலவரங்கள் எல்லாம் பின்னர் அவருடைய வாழ்க்கையில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும்,” என்று அமைச்சர் விளக்கினார்.
இளையர்களுக்கு முன்னதாகவே ஆதரவு வழங்கி உதவி செய்யக்கூடிய திட்டங்களைத் திரு லீ தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்தத் துறை சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பாடுபட்டு இளையர்களுக்கான ஆதரவைப் பலப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.