சிங்கப்பூர்-ரஷ்யா இருதரப்பு உயர்நிலைக் கூட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் நேற்று ஆறு உடன்பாடுகள் கையெழுத்தாயின.
அந்த உடன்பாடுகள் மின்னிலக்க மேம்பாடு, புத்தாக்கம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியவை. ரஷ்யா-சிங்கப்பூர் அரசு உயர்நிலை ஆணையத்தின் 10வது கூட்டம் ரஷ்யாவின் விலாடிவஸ்டாக் நகரில் நடந்தது.
சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், ரஷ்ய துணைப் பிரதமர் மேக்ஸிம் அக்கிமோ இருவரின் முன்னிலையில் உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டன.
இதனிடையே, சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு தர்மனும் திரு அக்கிமோவும் இரு நாடுகளுக்கு இடைப்பட்ட பல தரப்பு ஏறுமுக நல்லுறவுகளை மறுஉறுதிப்படுத்தினர்.
இந்த ஆணையம் கடந்த 10 ஆண்டுகளில் இருதரப்பு ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதில் முக்கியமான பங்காற்றி வந்திருப்பதாக இரு தலைவர்களும் குறிப்பிட்டனர்.
இருதரப்புகளும் தொடர்ந்து ஒத்துழைத்து ரஷ்யாவின் தூரக் கிழக்குப் பகுதியில் மேலும் வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும் என்று இந்தத் தலைவர்கள் வலியுறுத்தினர்.
இந்த ஆணையத்தின் அடுத்த கூட்டம் அடுத்த ஆண்டு சிங்கப்பூரில் நடக்கும்.