இணையக் களஞ்சியத்தில் முதலாளிகள் வேலை விண்ணப்பங்களை வேகமாக பரிசீலிக்க மேலும் வசதியாக MyCareersFuture.sg portal என்ற களஞ்சியத்தில் ஒரு புதிய அம்சம் இப்போது இடம்பெற்று இருக்கிறது.
இதன்மூலம் தங்களுக்குத் தேவைப்படக்கூடிய ஊழியர்களை, விண்ணப்பங்களைப் பார்த்து முதலாளிகள் 10 நிமிடங்களில் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
அந்தக் களஞ்சியத்தில் விவரங்களைப் பதிவிறக்கம் செய்யாமலேயே ஒருவர் கொண்டிருக்கக்கூடிய தேர்ச்சிகளையும் அனுபவங்களையும் முதலாளி தெரிந்துகொள்ள முடியும்.
பிறகு தேவை எனில் அந்த விவரங்களை அவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விளம்பரம் செய்யப்பட்டு இருக்கும் வேலையை ஒத்த தேர்ச் சிகளுடன் கூடிய இதர விண்ணப்பதாரிகளையும் அந்தக் களஞ்சியம் முதலாளிகளுக்குப் பரிந்துரைக்கிறது.
இந்த வசதி காரணமாக தேவைக்கேற்ப மேலும் பல ஊழியர்களைக் கண்டுபிடிக்க முடியும் என்று ‘ஆகஸ்ட் இன்டர்நேஷனல்’ என்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பயிற்சி வழங்கும் வல்லுநராக வேலை பார்க்கின்ற திருவாட்டி ஏஞ்சலின், 29, என்பவர் கூறினார்.
சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு நேற்று அந்தக் களஞ்சியத்தில் முதலாளிகளுக்கு உதவக்கூடிய புதிய அம்சத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்தது.
அந்தப் புதிய அம்சம், வேலை வங்கி என்ற ஓர் ஏற்பாட்டிற்குப் பதிலாக இடம்பெறுகிறது.
நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட பல தகவல்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட பல புதிய ஏற்பாடுகளும் அந்தப் புதிய அம்சத்தில் இடம்பெற்று இருக்கின்றன.
வேலைக்கு விண்ணப்பித்து இருப்போரின் தேர்ச்சிகள் அல்லது அனுபவம், எந்த அளவுக்குப் பொருத்தமானதாக இருக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து முதலாளிகள் விண்ணப்பங்களை வகைப்படுத்தும் ஏற்பாடும் இப்போது இடம்பெற்று இருக்கிறது.
இவை காரணமாக நிறுவனங்கள் தங்களுக்குப் பொருத்தமான ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பதில் செலவிடும் நேரம் மிகவும் குறையும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் வசதியாகவும் தேவையற்ற பணிகளைத் தவிர்த்துக் கொண்டும் ஊழியர்களைத் தேர்வு செய்யலாம்.
ஜூலை நிலவரப்படி 540,000க்கும் மேற்பட்டவர்கள் வேலைகள் தொடர்பில் அந்தக் களஞ்சியத்தில் தங்களைப் பதிந்துகொண்டு இருக்கிறார்கள் என்று சிங்கப்பூர் ஊழியரணி தெரிவித்து உள்ளது.