மத்திய சேமநிதியிலிருந்து ஒரு மாதத்திற்கு $15 மட்டுமே பெறும் 69 வயது ஆடவர், தனது ஓய்வுக்கால சேமிப்புக் கணக்கிலிருந்து பெருவாரியான தொகையை ஏற்கெனவே பயன்படுத்திவிட்டதாக மத்திய சேமநிதிக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.
திரு மைக்கல் டோ தியான் ஹோக் எனும் அந்த ஆடவரின் சாதாரண கணக்கில் இருக்கும் சேமிப்புக்கான கூடுதல் வட்டியாக அந்தத் தொகை அரசாங்கத்தால் வழங்கப்படுவதாகக் கழகம் தெரிவித்துள்ளது.
அவரது மத்திய சேமநிதி (மசேநி) சேமிப்புகளிலிருந்து பெருந்தொகை அவரது அனுமதியின்றி மெடிசேவ் கணக்குக்கு மாற்றப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது தவறு என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
அடிப்படை ஓய்வுக்கால மசேநி சேமிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யாதபோதும், திரு டோ தனது சாதாரண மற்றும் சிறப்பு கணக்குகளிலிருந்து $10,000 பெற்றுக்கொள்ளலாம் என்று கழகம் இவ்வாண்டின் தொடக்கத்தில் அவரிடம் தெரிவித்திருந்தது. ஆனால், அது தொடர்பாக அவர் விண்ணப்பம் செய்யவில்லை என்று கூறப்பட்டது.
இம்மாதம் 6ஆம் தேதி அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.