சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் புதிய பொங்கோல் வளாகம், தென்கிழக்காசியாவிலேயே பல்வேறு மூலங்களிலிருந்து எரிசக்தியைப் பெறும் நுண் மின்தொகுப்பு கட்டமைப்பைக் கொண்டிருக்கும்.
அதோடு, மாணவர்களும் தொழில்துறையும் எரிசக்தி இயங்குமுறைகளைச் சோதித்து, புத்தாக்கங்களை அமலாக்கக்கூடிய ஆராய்ச்சிக்கூடமும் புதிய வளாகத்தில் அமைக்கப்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்தது.
புதிய வளாகத்தின் கட்டுமானப் பணி செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 10) நிலம் அகழ்வு சடங்குடன் தொடங்கியது. இச்சடங்கில் பிரதமர் லீ சியன் லூங் கலந்துகொண்டார்.
சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் பயிற்சிமுறை சார்ந்த கற்றலைப் பெருமளவு வலியுறுத்துவதே மற்ற ஐந்து தன்னாட்சிப் பல்கலைக்கழகங்களிலிருந்து அதனை வேறுபடுத்திக் காட்டுவதாகத் திரு லீ கூறினார்.
தொழில்நுட்பக் கழகத்தின் பட்டதாரிகளின் 90 விழுக்காடு வேலை விகிதம் ஆரோக்கியமானதாக இருப்பதாகப் பிரதமர் லீ குறிப்பிட்டார்.
தன்னாட்சிப் பல்கலைக்கழகமான தொழில்நுட்பக் கழகம் இப்போது 42 பட்டப்படிப்பு வகுப்புகளை நடத்துகிறது. 2009ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இது, தற்போது ஆறு வளாகங்களில் செயல்படுகிறது. தலைமையகம் டோவரில் அமைந்துள்ளது.
புதிய மத்திய வளாகம் 91,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும். இங்கு 12,000 மாணவர்கள் பயில வசதி இருக்கும். புதிய வளாகம் 2023-ல் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.