காற்றின் தூய்மைக்கேட்டை அளவிடும் 24 மணி நேர மாசு தரக் குறியீடு (பிஎஸ்ஐ) சுகாதாரமற்ற நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று (செப்டம்பர் 10ஆம் தேதி) பிற்பகல் 2 மணி நிலவரப்படி தெற்கு சிங்கப்பூரில் பிஎஸ்ஐ அளவு 98 ஆக இருந்தது.
அது 100ஐ எட்டினால், இவ்வாண்டு முதல் முறையாக சிங்கப்பூரில் காற்றின் தரம் சுகாதாரமற்ற நிலையை எட்டியுள்ளதை அது குறிக்கும்.
இந்தோனீசியாவின் சுமத்ராவில் உள்ள காட்டுத் தீ சம்பவங்களின் காரணமாக சிங்கப்பூரில் இன்று காலை புகைமூட்டம் தென்பட்டதாக சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது. சுமத்ராவில் காட்டுத் தீ சம்பவங்கள் இருக்கும் வரை சிங்கப்பூரில் புகைமூட்டம் நீடிக்கும் வாய்ப்பு உள்ளது என்று அது குறிப்பிட்டது.
தெற்கு, தென்கிழக்கிலிருந்து காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த சில நாட்களுக்கு புகைமூட்ட நிலை தொடரும் என்று கூறப்பட்டது. சிங்கப்பூரின் வறண்ட வானிலையும் புகைமூட்டத்துக்குக் காரணமாக உள்ளது.
சூழலை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் மட்டுமின்றி தென்கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா, இந்தோனீசியா ஆகியனவும் புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
புகைமூட்ட நிலவரம் மோசமடைந்ததால் மலேசியாவின் சரவாக்கில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 10) சுமார் 400 பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் 150,000க்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. மலேசிய அரசாங்கம் சரவாக்குக்கு அரை மில்லியன் முகக் கவசங்களை அனுப்பி உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்தோனீசியாவின ஜாம்பி வட்டாரத்தில் சில பாலர்பள்ளிகள் வெள்ளிக்கிழமை வரை மூடப்பட்டுள்ள நிலையில் தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளும் அங்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.