குடிநுழைவு, சோதனைச் சாவடி அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அன்று 27 வயது ஆடவரின் வாகனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கள்ள சிகரெட்டுகளைக் கைப்பற்றினர். உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி வழியாக வந்த அந்த 27 வயது
ஆடவரின் காரில் 412 பெட்டிகளும் 640 சிகரெட் பாக்கெட்டுகளும் இருந்தன. கார் பின்பகுதியில் அமரும் பயணி அருகே உள்ள கதவும் இருக்கைகளுக்கு அடியில் உள்ள பகுதியும் மாற்றி அமைக்கப்பட்டிருந்தன. மாற்றம் செய்யப்பட்ட காரின் பகுதிகளைக் கவனித்த அதிகாரிகள், காரை மேலும் சோதனையிட்டதில் பதுக்கி வைக்கப்பட்ட கள்ள சிகரெட்டுகளைக் கண்டுபிடித்தனர். காரை ஓட்டி வந்த சந்தேக நபர் ஒரு மலேசியர் என்றும் அவர் சிங்கப்பூர் சுங்கச்சாவடியில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றும் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்தது.