இந்தோனீசியாவின் கலிமந்தான் பகுதியில் காட்டுத் தீச்சம்பவங்கள் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ள நிலையில் தொடர்ந்து சிங்கப்பூரில் அவ்வப்போது புகைமூட்டம் இருந்திடும் என்று தேசிய சுற்றுப்புற அமைப்பு நேற்று கூறியது.
சுமத்ராவிலும் கலிமந்தானிலும் மழை பெய்யாமல் வறட்சி நிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சிங்கப்பூரில் புகைமூட்டம் தொடர்ந்திட அதுவும் காரணமாக இருந்திடும் என்று அமைப்பு தெரிவித்தது.
நேற்று மாலை ஆறு மணி வரையில் பதிவான காற்றுத் தூய்மைக்கேடு குறியீடு, 69க்கும் 75க்கும் இடைப்பட்டிருந்தது. இது மிதமான அளவிலானது என்றும் கூறப்பட்டது.
மலேசியாவில் பெருகிவரும் புகைமூட்டத்தால் தாங்கள் பல்வேறு உடல் உபாதைகளால் துன்பப்படுவதாக அந்நாட்டு மக்கள் சமூக ஊடகங்களில் புகார் அளித்து வருகின்றனர். இதற்குத் தம் நாடு பொறுப்பல்ல என்று இந்தோனீசிய அமைச்சர் சித்தி தூர்பயா கூறியதை அடுத்து மலேசியா பதிலுக்குக் கண்டித்துள்ளது.