தனது முதலாளியின் 67 வயது தாயாரைப் பலமுறை சித்ரவதை செய்த பணிப்பெண்ணுக்கு நான்கு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்திமக்கட்டத்து சிறுநீரக நோயாளியான திருவாட்டி வீ கியு ஹொய், தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் அறை ஒன்றில் கடந்தாண்டு ஜூலை மாதம் 23ஆம் தேதி சேர்க்கப்பட்டிருந்தார். சுயமாக அசைய முடியாமல் படுத்தப்படுக்கையாய்க் கிடந்த அவர், இவ்வாண்டு ஜனவரி மாதம் 23ஆம் தேதி மாரடைப்பால் உயிர் நீத்தார்.
திருவாட்டி வீ உயிருடன் இருந்தபோது அவரை அன்றாடம் பராமரிக்க வேண்டிய பொறுப்பு மியன்மாரைச் சேர்ந்த 28 வயது லேன் கேயின் கையில் இருந்தது. ஆனால் லேன் அதனை முறையாகச் செய்யாமல் அந்த மூதாட்டியைப் பலமுறை அடித்தும் கிள்ளியும் இருக்கிறார். அத்துடன் அந்தப் பெண், திருவாட்டி வீயைத் தகாத சொற்களால் திட்டி அவரது முகத்தில் உமிழ்ந்ததாகவும் தெரிய வந்தது.
தமக்கு நேர்ந்ததைப் பற்றி திருவாட்டி வீ தம் மகன் திரு சூ வீ செங்கிடம் தெரிவித்ததை அடுத்து அவர் போலிசாரிடம் புகார் அளித்தார். திருவாட்டி வீயை அந்தப் பணிப்பெண் சித்ரவதை செய்ததைக் கண்காணிப்புக் கேமராக்கள் படமெடுத்ததாகப் பின்னர் தெரியவந்தது.
மரணத்தின் விளிம்பில் இருக்கும் நோய்வாய்ப்பட்ட ஒரு மூதாட்டியை அந்தப் பணிப்பெண் இப்படி வன்மமாக நடத்தியது “அப்பட்டமான துரோகம்” என்றார் அரசுதரப்பு வழக்கறிஞர் கோலின் இங்.