ஜூரோங் வெஸ்டில் உள்ள சிங்கப்பூர் பையன்கள் இல்லத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அங்குள்ள அறை கலன்களைச் சேதப்படுத்தியதற்காகவும் பொருட்களைத் தங்கள் அறைகளிலிருந்து தூக்கி எறிந்ததற்காகவும் கூச்சல் போட்டதற்காகவும் இளையர்கள் எழுவர் போலிசால் கைது செய்யப்பட்டனர்.
அங்குள்ள நிலையைச் சரிசெய்ய சுமார் இரண்டு மணி நேரம் பிடித்தது என்று போலிசார் தெரிவித்தனர். இச்சம்ப வத்தில் எவருக்கும் காயம் இல்லை என்று இல்லத்தை நடத்தும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு கூறியது.
கைது செய்யப்பட்ட ஏழு இளையர்களின் வயது என்ன என்று தெரிவிக்கப்படவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் இதே இல்லத்தில் கலவரத்தில் ஈடுபட்ட இளையர்கள் இருவர் நீதிமன்றத்தில் தோன்றிய அதே நாளில் இப்புதிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலையான இருவர், இல்லத்தில் பணியாற்றிய மூன்று பெரியவர்களைத் தாக்கிய மற்றும் இல்லத்தின் சொத்துகளைச் சேதப்படுத்திய கும்பலில் அங்கம் வகித்தவர்கள். இந்தத் தாக்குதலில் அங்கு பணியில் இருந்த 44 வயது துணை போலிஸ் படை அதி காரிக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. அது பெரும்பாலும் நிரந்தர காயமாகும் மாறும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படு கிறது.
நேற்று அந்த இரு இளையர்களுக்கு தலா ஓராண்டு சீர்திருத்தப் பயிற்சி தண்டனையாக விதிக்கப்பட்டது. அதன் மூலம் அவர்கள் சீர்திருத்தப் பயிற்சி நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, அணிவகுப்பு, ஆலோசனை பெறுதல் போன்ற கடுமையான நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த சம்பவம் நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற மூன்றாவது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது. அவை அனைத்திலும் இல்லத்தில் உள்ள கைதிகள் கலவரத்தை ஏற்படுத்தினார்கள். மூன்று சம்பவங்களும் செப்டம்பர் மாதத்தில் நிகழ்ந்துள்ளன.
2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், அந்த இல்லத் தில் உள்ள 26 கைதிகள் தங்கள் அறைகளிலிருந்து அறைகலன்களைத் தூக்கி எறிந்தும் விளக்குகளை உடைத்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர். கடந்த ஆண்டு செப்டம்பரில் ஏழு கைதிகள் மீது ஆயுதம் தாங்கி ஆர்ப்பாட்டம் புரிந்ததற்காக குற்றம் சாட்டப்பட்டது.