புகைப்பிடித்த பிறகு தனது வெண்சுருளைப் புல் தரையில் தூக்கி எறிந்த பேருந்து ஓட்டுநர் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீருடை அணிந்திருந்த அந்த ஓட்டுநரைப் பின்தொடர்ந்து, அவர் அவ்வாறு செய்ததைத் தமது கைப்பேசியில் காணொளி எடுத்ததாக ‘கப்குன்’ என்ற வாசகர் ஸ்டாம்ப் செய்தி இணையத்தளத்திடம் தெரிவித்தார். இம்மாதம் 6ஆம் தேதியன்று மாலை 6.20 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்ததாக அந்த வாசகர் கூறினார்.
“இது போன்ற குப்பையை நாங்கள் ஒவ்வொரு நாளும் காண்கிறோம்,” என்றார் ‘கப்குன்’.
வீசப்பட்ட சிகரெட்டிலிருந்து புகை இன்னமும் வெளிவருவதை அந்தக் காணொளி காட்டியது.
சம்பவம் குறித்து எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் மூத்த துணைத் தலைவர் குமாரி டேமி டான் கூறுகையில், “இத்தகைய நடத்தை, எஸ்பிஎஸ் டிரான்சிட் நிலைநாட்டும் பண்புகளைப் பிரதிபலிக்கவில்லை. எனவே, அந்தப் பேருந்து ஓட்டுநர் மீது நாங்கள் ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கவுள்ளோம்,” என்றார்.