மோட்டார் சைக்கிளுடன் விபத்துக்குள்ளான ஒரு கார், பாலம் ஒன்றின் தடுப்புக்குள் மோதியதை அடுத்து அதன் ஓட்டுநர் உயிரிழந்ததாக மலேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மாண்டவர் சிங்கப்பூரைச் சேர்ந்த 37 வயது திரு சுவா ஸிஜியென் என்று மலேசியாவின் ‘நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. விற்பனை இயக்குநராகப் பணியாற்றும் திரு சுவா, வேலை நிமித்தமாக கோலாலம்பூருக்குச் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது. கோலாலம்பூரின் மிட் வேலி மெகாமாலுக்கு அருகில் இருக்கும் கிழக்கு-மேற்கு இணைப்பு விரைவுச்சாலையில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.
திரு சுவா ஓட்டிக்கொண்டிருந்த வோல்க்ஸ்வேகன் பசாட் கார், ஹோண்டா ஈஎக்ஸ்5 மோட்டார் சைக்கிளை உரசியதை அடுத்து அவர் தமது காரின் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அந்தக் கார், பாலத்தின் தடுப்பில் மோதியதை அடுத்து திரு சுவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மலேசிய போலிசார் தெரிவித்தனர்.
பாலத்தின் இரும்புச் சட்டத்தின்கீழ் அந்தக் கார் நொறுங்கி மாட்டிக்கொண்டிருந்ததை மீட்புப் பணியாளர்கள் கண்டனர்.
இதே விபத்தில், மோட்டார் சைக்கிளின் 25 வயது ஓட்டுநர் சிறு காயங்களுடன் தப்பித்துக்கொண்டார்.திரு சுவாவின் காரில் பயணிகள் இருந்தார்களாக என்பது தற்போதைக்கு உறுதி செய்யப்படவில்லை.
சம்பவம் குறித்த தகவல் அதிகாலை சுமார் 3 மணிக்குக் கிடைத்ததாக கோலாலம்பூர் தீயணைப்புத் துறையின் பேச்சாளர் தெரிவித்தார்.
இவ்வாறு அடிக்கடி வேலைக்காக வெளிநாட்டுக்குச் செல்லும் திரு சுவா, தமது மனைவியையும் இரண்டு மகன்களையும் விட்டுப் பிரிவதாக அவரது அண்டை வீட்டார் கூறியதாக வான்பாவ் நாளிதழ் தெரிவித்துள்ளது. மூத்த மகனுக்கு மூன்று வயது என்றும் இளைய மகனுக்கு இரண்டு வயது என்றும் கூறப்படுகிறது.