தீவு விரைவுச்சாலையில் திங்கட்கிழமை காலை ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து 25 வயது மோட்டார் சைக்கிளோட்டி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். ஒரு வார விடுமுறைக்குப் பிறகு பள்ளித் தவணை தொடங்கிய முதல் நாளில் ஏற்பட்ட இந்த விபத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல மணி நேரத்திற்குப் பிறகுதான் போக்குவரத்து வழக்கநிலைக்குத் திரும்பியது.
சாங்கி விமான நிலையத்தை நோக்கிச்செல்லும் தீவு விரைவுச்சாலையில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து திங்கட்கிழமை (16 செப்டம்பர்) காலை 6.30 மணி வாக்கில் போலிசாருக்குத் தகவல் கிடைத்தது. இந்த விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிள், இரண்டு கார்கள், ஒரு லாரியை இழுத்துச் சென்றுகொண்டிருந்த ஓர் இழுவை லாரி ஆகியவை சம்பந்தப்பட்டிருந்தன.
பாதிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர். இந்த விபத்தினால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் கிளமெண்டி அவென்யூ 6 வரைக்கும் நீள்வதாக நிலப்போக்குவரத்து ஆணையம் டுவிட்டரில் இன்று காலை தெரிவித்தது. சாலைத்தடங்கள் ஒன்றையும் இரண்டையும் தவிர்க்குமாறும் ஆணையம் கேட்டுக்கொண்டது.
போலிசார் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.