புகைமூட்ட அளவைக் கண்காணித்து வருவதாகக் கூறும் சிங்கப்பூர் கிரான் ப்ரீ (Singapore Grand Prix ) கார்ப்பந்தயத்தின் ஏற்பாட்டுக் குழு, வாரயிறுதியில் அந்தப் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவித்திருக்கிறது. கடந்தாண்டு மரினா பே சாலைப் பந்தயத்தடத்தில் (Marina Bay Street Circuit) மூன்று நாட்களுக்கு நிகழ்ந்த இந்தப் போட்டியை 263,000க்கும் அதிகமானோர் காணச் சென்றிருந்தனர். 2008ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் முதன்முதலாக நிகழ்ந்த அந்தப் போட்டி, அப்போது சுமார் 300,000 பேரை ஈர்த்தது.
தற்போதைய பிஎஸ்ஐ காற்றுத்தரக் குறியீட்டின் அடிப்படையில், திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பந்தய நிகழ்ச்சியில் எந்த மாற்றமும் செய்வதற்கான உத்தேசங்கள் இல்லை என்று ‘சிங்கப்பூர் கிரான் ப்ரீ’ பேச்சாளர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் நேற்று தெரிவித்தது.
”புகைமூட்டச் சூழல் மிக விரைவில் மாறக்கூடியது என்பதால் வாரயிறுதி நிலவரத்தை நம்பகமான முறையில் இப்போதே முன்னுரைப்பது சாத்தியமாகாது. மிகச்சிறந்த முன்னுரைப்புகளைப் பெறுவதற்காக நாங்கள் இங்குள்ள அரசாங்க அமைப்புகளுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம்,” என்று அந்தப் பேச்சாளர் கூறினார்.
கடந்த சனிக்கிழமை, 24 மணி நேர பிஎஸ்ஐ குறியீட்டு அளவு சுகாதாரமற்ற நிலையை (101 முதல் 200 வரை) எட்டியது. சனிக்கிழமை இரவு அது 114ஆகப் பதிவாகியது. இந்தப் பிரச்சினையால் கடந்த வாரயிறுதியில் நடைபெறவேண்டியிருந்த அனைத்துலகப் பெண்கள் சைக்கிள் நிகழ்ச்சி உள்ளிட்ட சில விளையாட்டு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.