அப்பர் புக்கிட் தீமா சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் ஆயுதம் ஏந்தி கொள்ளையடித்த 50 வயது சிங்கப்பூரரான விஸ்வானந்தன் வடிவேலுவுக்கு எதிராகக் கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் நேற்று (செப்டம்பர் 17) அவர் முன்னிலையாகியிருந்தார். நீதிமன்ற விசாரணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டபோது அவர் தலைமறைவான நிலையில், இவருக்கு எதிராக கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்தி கொள்ளை அடித்தது, போதைப் பொருள் உட்கொண்டது மற்றும் அதை இருப்பில் வைத்திருந்தது ஆகிய குற்றங்களை முன்னதாக விஸ்வானந்தன் ஒப்புக்கொண்டிருந்தார்.
தம்மைப் பிரதிநிதித்த வழக்கறிஞர் ஏ.ரவி சங்கர் என்பவரின் சட்ட சேவையை விஸ்வானந்தன் நேற்று முன்தினம் நிராகரித்துவிட்டார். இதனால், நீதிமன்றத்தில் நேற்று மாலை வழக்கறிஞர் எவரும் இவரைப் பிரதிநிதிக்கவில்லை. போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்தைத் தவிர்த்து, முன்பு தாம் ஒப்புக்கொண்ட ஏனைய குற்றச்சாட்டுகளை மறுப்பதாக நேற்று நீதிபதியிடம் விஸ்வானந்தன் கூறினார்.
அதையடுத்து, நீதிமன்ற அறைக்கு வழக்கறிஞர் ரவியை அழைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஏறக்குறைய 15 நிமிடங்கள் கழித்து திரு ரவி நீதிமன்ற அறைக்கு வந்தபோது விஸ்வானந்தனை அங்கு காணவில்லை. அதைத் தொடர்ந்து நீதிபதி அவருக்கு எதிராக கைதாணையைப் பிறப்பித்தார்.