காலை வேளையில் வேலைக்குச் செல்வோர், பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் போன்றவர்கள் புகைமூட்டத்திலிருந்து தப்பிக்க முகக்கவசம் அணிந்திருந்ததைப் பார்க்க முடிந்தது.
தீவின் தென்பகுதியில் புதன்கிழமை அன்று ( செப்டம்பர், 18 ) அதிக புகைமூட்டம் நிலவியதாகவும் 24 மணி நேர காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு அப்பகுதியில் 122 ஆக இருந்ததாகவும் கூறப்பட்டது. வடக்குப் பகுதியில் அந்த அளவு 107 ஆகப் பதிவாகியிருந்தது.
நேற்று இரவு நேரத்தில் புகைமூட்டத்தின் அளவு அதிகரித்ததன் எதிரொலியாக காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மலேசியாவில் கூடுதல் எண்ணிக்கையில் பள்ளிகள் மூடல்:
அண்டை நாடான மலேசியாவில் புகைமூட்ட நிலவரம் அபாயகரமான நிலையை எட்டியிருப்பதால் அங்கு அதிக எண்னிக்கையிலான பள்ளிகள் புதன்கிழமை (செப்டம்பர், 18) மூடப்பட்டன. சரவாக்கில் 281 தொடக்கப்பள்ளிகளும் 56 உயர்நிலைப்பள்ளிகளும் இன்று மூடப்பட்டன. சுமார் 138,300 மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மலேசியாவின் ஒன்பது மாவட்டங்கள் புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ அம்மானில் காற்று தூய்மைக்கேட்டுக் குறியீடு (ஏபிஐ) அதிகபட்சமாக 354ஐத் தொட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.