சீன நாட்டவரான சாங் ஹுவாசியாங்கின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக மலேசியரான 51 வயது போ சூன் ஹோ மீது குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது. இது தொடர்பான முதல் வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது.
தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் தாதியாகப் பணிபுரிந்த குமாரி சாங்கின் கழுத்தை துண்டு ஒன்றால் நெரித்துக் கொன்ற பிறகு ஆடையில்லாத அப்பெண்ணின் சடலத்தைப் படம் எடுத்து சடலத்துடன் பாலியல் உறவு கொள்ள போ முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்தக் குற்றத்தை போ, 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி பிற்பகல் 12.15 மணிக்கும் மாலை 5.50 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் சர்க்கியுட் சாலையில் உள்ள தமது வாடகை அறையில் புரிந்ததாக அறியப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம். பொறாமை காரணத்தால் குமாரி சாங்கை போ கொலை செய்ததாக அரசாங்க வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
2011ஆம் ஆண்டுக்கும் 2012ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் குமாரி சாங் தாதிமைக் கல்வி பயின்றுகொண்டிருந்தபோது மரினா பே சேண்ட்ஸ் ரிசோர்ட் ஊழியர்களுக்கான உணவகத்தில் பகுதி நேரமாக வேலை செய்தார். அப்போது அவருக்கு போவின் அறிமுகம் கிடைத்தது.
குமாரி சாங் மரணம் அடைவதற்கு சில நாட்களுக்கு முன்பு வேறோர் ஆடவருடன் அவர் டாக்சியில் செல்வதை போ பார்த்து பொறாமை கொண்டார்.
சம்பவம் நிகழ்ந்த நாளன்று குமாரி சாங்குடன் அவர் பாலியல் உறவு கொள்ள முயன்றார். ஆனால் குமாரி சாங் அவரை நெருங்கவிடவில்லை. அந்த இன்னோர் ஆடவரைப் பற்றி போ கேட்டபோது, தாம் அவருடன் நான்கைந்து தடவை வெளியே சென்றிருப்பதாக குமாரி சாங் கூறினார்.
அதுமட்டுமல்லாது, சீனாவில் இருக்கும் தமது முன்னாள் காதலனுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் அவருடன் நெருக்கமாக இருப்பது இயல்பு என்றும் போவிடம் குமாரி சாங் தெரிவித்தார்.
இதைக் கேட்டதும் ஆத்திரம் அடைந்த போ துண்டைப் பயன்படுத்தி குமாரி சாங்கின் கழுத்தை நெரித்துக் கொன்றதாக நம்பப்படுகிறது. இறந்துவிட்ட குமாரி சாங் தடுக்க முடியாது என்பதால் அவரது சடலத்துடன் பாலியல் உறவு கொள்ள போ முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. இரவு முழுவதும் சடலத்துடன் இருந்துவிட்டு மறுநாள் அங்கிருந்து மலாக்காவில் இருக்கும் தமது சகோதரியின் வீட்டுக்குச் சென்று நடந்தவற்றைக் கூறினார் போ. போ தங்குவதற்கு வாடகை அறை ஒன்றை அவரது சகோதரி தேடித் தந்தார்.
இதற்கிடையே, அறையில் குமாரி சாங்கின் சடலம் இருப்பதைக் கண்டுபிடித்த வீட்டின் உரிமையாளர் போலிசிடம் புகார் செய்தார். 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் தேதியன்று போவை மலேசிய போலிசார் கைது செய்து சிங்கப்பூர் போலிசிடம் ஒப்படைத்தனர். குமாரி சாங் மீது கோபமடைந்ததால் அவரது கழுத்தை நெரித்ததை போ ஒப்புக்கொண்டார்.
அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்ல என அவரைச் சோதனையிட்ட பிறகு மனநலக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.