பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போரில், வர்த்தகங்கள் தாங்கள் வழக்கமான வர்த்தக முறைகளில் இருந்து மாறுபட்டு செயல்படவேண்டும் என்று சுற்றுப்புற நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார்.
இதில் நிதித்துறை அமைப்புகளும் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான முயற்சிகளில் முக்கிய பங்காற்றலாம் என்றார் அவர்.
பிஎன்பி பரிபாஸின் தாக்குப் பிடிக்கக்கூடிய எதிர்காலம் குறித்த கருத்தரங்கில் நேற்று பேசிய அமைச்சர், நீண்டகால வளர்ச்சித் திட்டங்களில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய அபாயங்கள், வாய்ப்புகளைக் கருத்தில்கொள்ள வேண்டும் என்றார்.
இதில் உற்பத்தி செய்வதில் இருந்து பயனீட்டாளர்கள் பயன்படுத்தும் வரையுள்ள அனைத்து நடைமுறைகளையும் ஒட்டுமொத்த ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றார் அவர்.
அரசாங்கக் கொள்கைகள் எல்லாம் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் முயற்சிகளைத் துரிதப்படுத்தினாலும் பொருளியல் வளர்ச்சிக்குப் பொறுப்பான உந்துசக்தியாக விளங்கும் தனியார் துறையும் தனது பங்கை ஆற்ற வேண்டும் என்றார் அவர்.
முதல்படியாக, பருவநிலை மாற்றத்தால் தங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பற்றி வர்த்தகங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக அனைத்துலக லாபநோக்கமற்ற அமைப்பான சிடிபி என்ற அமைப்பு, பருவநிலை மாற்றத்தால் நிறுவனங்கள் கிட்டத்தட்ட அமெரிக்க டாலர் ஒரு டிரில்லியன் அளவிலான பாதிப்பை எதிர்நோக்கக்கூடும் எனக் கணித்துள்ளது.
இதில் நான்கில் ஒரு பகுதி கைவிடப்பட்ட சொத்துகளின் அளவாகும்.
அதேநேரத்தில், பருவநிலை மாற்ற அபாயங்கள், எரிசக்தியை மறுபயனீடு செய்வதற்கான சுத்தமான ஹைட்ரஜன் எரிவாயுவை உருவாக்குவது போன்ற புதிய தீர்வுகளைக் கண்டறியும் வாய்ப்புகளையும் நிறுவனங்களுக்கு வழங்குகின்றன என்றார் அமைச்சர் ஸுல்கிஃப்லி.
வரும் 2030 வாக்கில் பருவநிலை தொடர்பான முதலீடுகளுக்கு ஆசியாவில் அமெரிக்க டாலர் $20 டிரில்லியன் அளவுக்குத் தேவைப்படும் என்று அனைத்துலக நிதி நிறுவனமான சிடிபி கணிக்கிறது.
நமது வர்த்தக முறைகளையும் செயல்பாடுகளையும் மறுஆய்வு செய்ய வேண்டும். இதில் முன்கூட்டியே செயல்படுபவர்கள் அனுகூலங்களைப் பெறுவர் என்றார் திரு ஸுல்கிஃப்லி.

