கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின் இடைவேளையின்போது தப்பிச் சென்ற ஆடவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரரான 50 வயது விஸ்வநாதன் வடிவேலு நேற்று நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
ஆயுதம் ஏந்திக் கொள்ளை அடித்த வழக்கில் அவர் குற்றவாளி என ஏற்கெனவே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்தி கொள்ளையடித்தது, போதைப்பொருள் உட்கொண்டது, போதைப்பொருள் வைத்திருந்தது ஆகிய குற்றங்களைப் புரிந்ததற்காக இம்மாதம் 26ஆம் தேதியன்று அவருக்கு எதிராக தீர்ப்பளிக்கப்படும்.
அவருக்கு எதிராகக் கடந்த செவ்வாய்க்கிழமையன்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்க வேண்டியது.
ஆனால் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டைத் தவிர மற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பான ஒப்புதல்களை மீட்டுக்கொள்ள விரும்புவதாக விஸ்வநாதன் நீதிபதியிடம் தெரிவித்தார்.
குற்றச்சாட்டு தொடர்பான ஒப்பு தல்களை மீட்டுக்கொள்வதற்கான காரணத்தை நீதிபதி அவரிடம் கேட்டபோது தமக்கு மனநலப் பிரச்சினைகள் இருப்பதாக விஸ்வநாதன் தெரிவித்தார்.
தமது வழக்கறிஞராக இருந்த ஏ. ரவிசங்கர் இந்த வழக்கு விவரங்களில் அக்கறை காட்டவில்லை என்றும் அவர் கூறினார். ரவிசங்கரின் சேவைகளை அவர் அதற்கு முன்பே ரத்து செய்திருந்தார்.
திரு ரவிசங்கரை அழைத்து வருமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதனால் வழக்கு விசாரணை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. 15 நிமிடங்கள் கழித்து திரு ரவிசங்கர் நீதிமன்றம் வந்தடைந்தபோது விஸ்வநாதனைக் காணவில்லை.
விஸ்வநாதனுக்கு எதிராக கைது ஆணையை நீதிபதி பிறப்பித்தார்.
2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் தேதியன்று அப்பர் புக்கிட் தீமா சாலையில் உள்ள ஷெல் பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஊழியரிடம் விஸ்வநாதன் கத்தியைக் காட்டி $1,000 ரொக்கம் கொள்ளையடித்து தப்பினார்.
அவர் நான்கு மணி நேரம் கழித்து கைது செய்யப்பட்டார்.
அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டு பதிவாகி பிணையில் விடுவிக்கப்பட்டார். பிணையில் இருந்தபோது போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் ஹெராயின் பொட்டலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது, அவரது சிறுநீரைச் சோதித்துப் பார்த்தபோது அதில் 'ஐஸ்' போதைப்பொருள் உட்கொண்ட அறிகுறிகள் தென்பட்டன.
ஆயுதம் ஏந்தி கொள்ளை யடிப்போருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம். 50 வயதுக்கு மேற்பட்டோருக்குப் பிரம்படி விதிக்க முடியாது.

