பெற்ற மகளை மானபங்கம் செய்தது தொடர்பான வழக்கில் ஆடவர் ஒருவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் அந்த ஆடவர் தமது மகளை மானபங்கம் செய்தார். அப்போது அவரது மகளுக்கு 12 வயது.
மானபங்கம் செய்யப்பட்டது குறித்து அந்தச் சிறுமி தமது தாயாரிடம் கூறியதை அடுத்து அந்த ஆடவர் அழுது மன்னிப்பு கேட்டார். ஆனால் ஓராண்டு கழித்து திரும்பவும் அந்தக் குற்றத்தை அவர் புரிந்தார். 2016ஆம் ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அந்தச் சிறுமியை அவர் மீண்டும் மூன்று முறை மானபங்கம் செய்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தைக் காக்க, அவரது தந்தையின் பெயர் வெளியிடப்படக்கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் தேதியன்று அச்சிறுமி மிக மோசமான வகையில் மானபங்கம் செய்யப்பட்டதை அடுத்து, சிறுமியின் பாட்டி போலிசில் புகார் செய்தார்.
மகளை மானபங்கம் செய்த ஆடவருக்கு குறைந்தது ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஒன்பது பிரம்படிகளும் விதிக்க வேண்டும் என்று அரசாங்க வழக்கறிஞர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
அந்தச் சிறுமியின் தந்தை $15,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக இம்மாதம் 25ஆம் தேதியன்று தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மானபங்கம் தொடர்பாகப் பதிவாகும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதம் அல்லது பிரம்படியும் விதிக்கப்படலாம்.